உடைந்தும் நசுங்கியும் இருந்த இலவச மிக்ஸி, கிரைண்டர்: ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் !
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே தமிழக அரசின் இலவச மிக்ஸி,கிரைண்டர் பொது மக்களுக்கு உடைந்தும், நசுங்கியும் இருந்த நிலையில் வழங்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே முகையூர் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச கிரைண்டர், மிக்ஸி, பேன் ஆகிய பொருட்கள் உடைந்திருந்ததால பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
முகையூர் கிராமத்தில் 750 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 500 குடும்பத்தினருக்கு அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன் ஆகிய பொருட்கள் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.பல மணி நேரம் காத்திருந்து இவற்றை பெற்ற பொதுமக்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தபோது பெரும்பாலான மிக்சிகளில் பிளேடு உள்ளிட்ட உதிரி பாகங்கள் கழன்று இருந்தது. சில பொருட்கள் உடைந்தும், நசுங்கியும் இருந்துள்ளது.
மேலும் சிலர் மிக்சி, கிரைண்டரை இயக்கி பார்த்தபோது அவை செயல்படாமல் நின்றுவிட்டது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதை மாற்றி தருமாறு ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவற்றை மாற்ற முடியாது என்றும், அவற்றை தூக்கிப் போடுமாறும் அவர் கூறியதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், ஆவேசமடைந்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளின் அலச்சியத்தால் ஆவேசமடைந்த மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் எந்த பலனும் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அரசின் இலவச பொருட்கள் பழுதான நிலையில் வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.