எனக்கும் எனது மனைவி உயிருக்கும் ஆபத்து.. பாதுகாப்பு கேட்டு தீபா கணவர் மாதவன் போலீசில் மனு
பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: போயஸ் கார்டனுக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு நுழைய முயன்றார். அப்போது தீபா மற்றும் அவரது கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீபா கணவர் மாதவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் கார்டனில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். எனினும் சசிகலாவின் சொந்தக்காரர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் போயஸ் கார்டன் தனக்கு தான் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்தார். மேலும் கார்டனுக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உள்ளே சென்ற அவரை தினகரனின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தீபாவின் கணவர் மாதவனும் போயஸ் கார்டனுக்கு வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதனை மீறி மாதவன் தடுப்பைத் தாண்டி போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். மாதவனின் ஆதரவாளர்களும் அங்கு குவிந்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜெ.தீபா மற்றும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கோரி மாதவன் மனு அளித்துள்ளார்.