ஜெயலலிதா மரணத்தில் மர்மம்- திடீரென 'கண்டுபிடிப்பு' - முரண்பாடுகளின் மொத்த உருவமா தீபா?
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமேயில்லை என்று கூறி வந்த தீபா, இப்போது கொலை செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை, சிகிச்சையிலும் சந்தேகமில்லை என்று முன்பு கூறிய தீபா, இப்போது ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளார். தனது தம்பி தீபக்கும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து கொன்று விட்டதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தீபா கூறி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தார். இதில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை சசிகலா மீது வைத்தனர்.

சந்தேகமில்லை
டிசம்பர் மாதம் முதன்முறையாக தீபா செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று ஆணித்தரமாக தெரிவித்தார். ஏனென்றால் தனது அண்ணன் தீபக், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த போது மருத்துவமனையில் உடன் இருந்தார் என்ற காரணத்தையும் கூறினார்.

பதில் தரவேண்டும்
ஜனவரி மாதத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ஜெயலலிதா மரணம் பற்றி உள்ள மர்மத்திற்கு உரியவர்கள் பதில் தர வேண்டும் என கூறினார். அப்போதே அவர் சசிகலாவை மனதில் வைத்துதான் கூறினார்.

தீபக் பேட்டி
அத்தை ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் விளக்கம் அளித்திருக்கிறார். உடல் நலம் சரியில்லாமல் அத்தை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நானும் அங்கு தான் 70 நாட்கள் இருந்தேன். அத்தைக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆவணங்கள் சிலவற்றில் நானும் சசிகலா அத்தையும் கையெழுத்திட்டோம் என்று கூறியிருந்தார்.

அப்பல்லோ சிகிச்சை
அதே நேரத்தில் தீபா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜெயலலிதாவுக்கு ரத்த சொந்தம் நானும் தீபக்கும் தான். என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. என்னை உள்ளேயே விடாமல் தடுத்துவிட்டனர். டிசம்பர் 5ஆம் தேதி உயிர்காக்கும் உபகரணங்கள் நீக்கப்பட்டது ஏன்? யாரிடம் சம்மதம் பெறப்பட்டது? ஆவணங்களில் யார் கையெழுத்திட்டது? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஆவணங்களை வெளியிடுங்கள்
மருத்துவ நெறிமுறைகளின் அடிப்படையில் என்னிடமும், தீபக்கிடமும் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். என்னிடம் எந்த ஒப்புதலும் பெறவில்லை. தீபக்கிடம் இருந்து சம்மதம் பெறப்பட்டிருந்தால் அந்த ஆவணங்களை அரசு வெளியிட வேண்டும். அரசு அறிக்கையில் குடும்பத்தார் யார் என்று ஓரிடத்தில் கூட பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறியிருந்தார்.

கொலை செய்து விட்டனர்
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விடை காண தர்மயுத்தம் நடத்தி வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் சசிகலாவும், ஓபிஎஸ்சும் கபடநாடகமாடுவதாக கூறி வந்தார் தீபா. இப்போது திடீரென்று ஜெயலலிதாவை கொலை செய்து விட்டனர் என்றும், அதற்கு தனது தம்பி தீபக்கும் உடந்தை என்றும் கூறியுள்ளார் தீபா.

ஆதாரம் இருக்கிறது
ஜெயலலிதாவை கொலை செய்ததற்கான ஆதாரம் இருக்கிறது. அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று நேற்றைய டிவி பேட்டியில் தெரிவித்தார். இதையேதான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். டிசம்பர் மாதம் பேசிய தீபா, திடீரென்று ஜெயலலிதாவை கொலை செய்தது சசிகலா என்று கூறுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கு தொடரவில்லையே
அப்பல்லோவே ஒப்புக்கொண்டபடி ரத்த சம்மந்த உறவுகளுக்கு ஜெயலலிதா சிகிச்சை பற்றிய விவரங்களை கேட்டறிய உரிமையுள்ளது. இதுவரை ஜெயலலிதாவின் ரத்த சம்மந்தப்பட்ட உறவுகள் யாருமே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவமனையிலிருந்து கேட்டு பெறவில்லை. எனவே தீபா அதை செய்ய முடியும். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக யார் யாரோ வழக்கு தொடர்ந்த போது தீபா எதையுமே செய்யவில்லை.

தீபா விளக்குவாரா?
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்தான் என்ன என்று தமிழக மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை தீபா விளக்க வேண்டும். அப்போதுதான் இதில் சசிகலா பங்கு என்ன? தீபக்கின் பங்கு என்ன? என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications