தீபாவளிக்கு ஆடைகள், பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்... திணறிய தி. நகர்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் புத்தாடைகள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க மக்கள் கடை வீதிகளுக்கு படையெடுத்தனர். லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் தி. நகர் திணறித்தான் போனது. தலையா? கடல் அலையா? என்று கேட்கும் அளவிற்கு ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அவர்களை சமாளிக்க போலீசார் பெரும்பாடு பட்டனர்.
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள். இந்த பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
தமிழத்தில் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துணிக்கடை மற்றும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மழை இல்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் மக்கள் சந்தோசமாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
படையெடுத்த மக்கள்
தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த பலரும் புத்தாடைகள், பட்டாசு வாங்க சென்னையில் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது. அனைத்து பகுதிகளிலும் மாநகரப் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. எத்தனை பகுதிகளில் கடைகள் இருந்தாலும் தி.நகரில் ஜவுளி வாங்குவதற்கு ஈடாகுமா என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. எனவேதான் இன்று ஏராளமானோர் தி. நகரில் குவிந்தனர்.
தி.நகரில் ஜவுளிக்கடல்கள்
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்ததால் ஜனசமுத்திரமாக காணப்பட்டது தி. நகர். அலை அலையாக திரண்ட மக்கள் முக்கிய ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று புத்தாடைகளை வாங்கி சென்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்களை நடக்க வாய்ப்பு அதிகம் என்பதால், அதைதடுக்க போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தி.நகரில் மட்டும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஏறி நின்று பைனாகுலர் மூலம் கூட்டத்தை போலீசார் கண்காணித்தனர். சாலைகளில் சாதாரண உடையில் மக்களோடு, மக்களாக சென்றவாறு பாதுகாப்பு அளித்தனர். சாலைகளில் கயிறு கட்டி தடுத்து போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்தினர். இது தவிர திருடர்களை கண்காணிக்க தி.நகரில் 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
திணறிய தி. நகர்
குழந்தைகளின் கையை பிடித்தபடி அழைத்து செல்லுமாறும் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தனர். முன்பின் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் என அறிவித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செல்போன் பேசிக்கொண்டே நடந்து மணிபர்சை விட்டு விட வேண்டாம் என்றும் எச்சரித்தனர் போலீசார்.
தீபாவளிக்கு முந்தையநாள் வரை தீபாவளிக்கான புத்தாடை, பட்டாசு விற்பனை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு என்பதால் லட்சக்கணக்கானோர் திரண்டதால் தி.நகர் திணறித்தான் போனது.