விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட அரசு...இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய வன்கொடுமை!
டெல்லி: இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய வன்கொடுமையாக ஒரு அரசே விவசாயிகளை தன் சொந்த மண்ணில் நிர்வாணமாக ஓட விட்ட துயரம் நடந்துள்ளது. தமிழக விவசாயிகள் எட்டுப் பேரை பிரதமர் மோடியை சந்திக்கலாம் என்று கூறி அழைத்து சென்றது டெல்லி போலீஸ். ஆனால், அங்கு மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றி அனுப்பியது. இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக ஓடியது பெரும் துயரத்தைக் கொடுத்துள்ளது.
தமிழக விவசாயிகள் கடந்த 29 நாட்களாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் டெல்லியில் போராடி வருகின்றனர். தலையை மொட்டையடித்துப் போராட்டம், தலைகீழாக நின்று போராட்டம் என பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியபோது, விவசாயிகள் மீது தடியடி நடத்தி, வன்முறையால் அவர்களை கையாண்டு கைது செய்தது. பிறகு விடுவித்தது.
இன்று டெல்லி போலீஸார், விவசாயிகளிடம் பிரதமரை சந்திக்கலாம் என நயவஞ்கமாகப் பேசிக் கூட்டிக்கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சென்றதும் வெறும் மனுக்களை மட்டும் வாங்கிக்கொண்டு விவசாயிகளைத் திருப்பி அனுப்பியது. விவசாயிகள் தாங்கள் நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் சாலைகளில் நிர்வாணமாக ஓடினர். புரண்டனர்.
இது இந்த நூற்றாண்டிலேயே நடந்த மிகப் பெரிய வன்கொடுமை. 29 நாட்களாக விவசாயிகளை உணவில்லாமல், உறைவிடமில்லாமல் போராட வைத்தது மட்டுமில்லாமல், நம்ப வைத்து கழுத்தறுத்து, தன் நாட்டுக் குடிமகனை நிர்வணமாக அலையவிட்டது மத்திய அரசு.