செல்லாத நோட்டுப்பிரச்சினை... திருப்பூரில் கடையடைப்பு - 3 பஸ்கள் மீது கல்வீச்சு
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்தை கண்டித்து திருப்பூரில் முழுஅடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. 3 அரசுப் பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.
திருப்பூர்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 30ம் தேதி வரை அந்த பணத்தை பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தி, திருப்பூரில் இன்று ஒரு நாள் கடையடைப்பு, வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கறுப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 500 1000 ரூபாய்தாள்களைச் செல்லாது என்று அறிவித்து இரு வாரங்கள் ஆகிறது. இத்தனைநாட்களில் சிறு, குறு தொழில் துறையினர், வியாபாரிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட நகரம், கிராமம் என அனைத்துப் பகுதி மக்களும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஒரு குட்டையில் உள்ள முதலை களைக் கொல்ல வேண்டும் என்பதற்காக குட்டையில் உள்ள தண்ணீரை எல்லாம் பிரதமர் அப்புறப்படுத்திவிட்டார். ஆனால் பெரிய முதலைகள் நீரில்லாவிட்டால் நிலத்திற்கு வந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பதை அவர் மறந்துவிட்டார். பெரும் முதலைகள் தப்பித்துக் கொண்டுவிட்டன. இப்போது தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டிருப்பது என்னவோ சிறிய மீன்கள்தான்! என்பது தொழிலாளர்களின் வேதனையாகும்.
மோடி அறிவிப்புக்கு எதிர்ப்பு
மோடியின் அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து திருப்பூரில் நடைபெற்ற அனைத்துக்கட்சி, தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ரூபாய் நோட்டுகள் இல்லாவிட்டால், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்துங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. நம் நாட்டிலுள்ள 113 கோடி மக்களில் 2 கோடியே 60 லட்சம் பேரிடம்தான் கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. 14 லட்சம் பேர்தான் டெபிட் கார்டுகள் மூலமாக சில்லறைக் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள்.
தினம் தினம் அவதி
அதேசமயம் நம் நாட்டில் நேரடியாக கொடுக்கல் வாங்கல் மூலம் 80 சதவிகிதத்திற்கும் மேலான ரொக்கப் பொருளாதாரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இருக்கக்கூடிய லாரி ஓட்டுனர்கள் முதல் மீனவர்கள் வரை, தினக்கூலி தொழிலாளிகளிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் வரை அனைத்துத் தரப்பினரும் இன்றைய தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மீன்கள் பாதிப்பு
ஒரு குட்டையில் உள்ள முதலைகளைக் கொல்ல வேண்டும் என்பதற்காக குட்டையில் உள்ள தண்ணீரை எல்லாம் பிரதமர் அப்புறப்படுத்திவிட்டார். ஆனால் பெரிய முதலைகள் நீரில்லாவிட்டால் நிலத்திற்கு வந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பதை அவர் மறந்துவிட்டார். பெரும் முதலைகள் தப்பித்துக் கொண்டுவிட்டன. இப்போது தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டிருப்பது என்னவோ சிறிய மீன்கள்தான்! எனவே சிறிய மீன்களைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிசம்பர் 30 வரை அனுமதி
டிசம்பர் 30 ஆம் தேதி வரை 1000, 500 ரூபாய்தாள்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு உடன டியாக அறிவிக்க வேண்டும்.பனியன் கம்பெனி, விசைத்தறி உட்பட தொழில் நிறுவனங்கள் கொடுக்கும் ஊதியத் தொகை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக இருப்பதால் அவற்றை வங்கியில் செலுத்தி மாற்ற முடியாமலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்க இயலாமலும் மிகப்பெரும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொது மக்களின் நலனுக்கு விரோதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியைக் கண்டித்தும், டிசம்பர் 30ஆம் தேதி வரை 500, 1000 ரூபாய் பணத்தாளை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வலியுறுத்தியும் இன்று நவம்பர் 23ம் தேதி கடையடைப்பு நடைபெறுகிறது.
அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு
தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையடைப்பு போராட்டம், பந்த் நடத்த அழைப்பு விடுத்த நிலையிலும் பல இடங்களில் கடைகளில் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. ஆர்பாட்டத்தில் போது பேருந்துகள் மீது கல்வீசப்பட்டன. இதில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. பேருந்து மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.