ஏடிஎம்களில் போதிய பண இருப்பு உறுதி செய்யப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை: மீன்பிடி துறைமுகம், இறங்குதளத்தில் நடமாடும் வங்கி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளம் அருகே ஏடிஎம்களில் போதிய பண இருப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 8ம்தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அன்று முதல் இன்று வரை ஏழை முதல் பணக்காரன் வரை தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற வங்கிகள் முதல் ஏடிஎம்கள் வரை இரவு பகல் என்று பாராது கால் கடுக்க காத்துக்கிடக்கின்றனர். இன்றுடன் 10வது நாள் ஆகியும் வங்கிகளில் இன்னும் கொஞ்சம் கூட கூட்டம் குறையவில்லை. ஏடிஎம் செயல்பாடுகளும் முழு அளவில் இல்லை. சில ஏடிஎம் மையங்கள் மட்டுமே செயல்படுகிறது என்றாலும் பணம் நிரப்பப்பட்ட சில மணி நேரத்திலேயே பணம் தீர்ந்து விடுகிறது. இதே நிலையே நீடிப்பதால் மக்கள் பணம் எடுக்க கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஏடிஎம்களில் பணமில்லாததால் தொழிலாளர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மீனவர்களும், துறைமுக தொழிலாளர்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக ஏடிஎம்களில் போதுமான பண இருப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மீன்பிடி துறைமுகம், இறங்குதளத்தில் நடமாடும் வங்கி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications