ரூபாய் நோட்டுகளுக்கு தடை.. 1 கோடி கிலோ கறிக்கோழி தேக்கம்.. ஒரே வாரத்தில் 150 கோடி நஷ்டம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேங்கி 150 கோடி ரூபாய் அளவிற்கு நட்டம் ஏற்பட்டது.
நாமக்கல்: 'ரூபாய் நோட்டு செல்லாது' என்ற அறிவிப்பால் நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதனால் சுமார் 150 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, மக்களிடம் பணப் புழக்கம் முற்றிலும் முடங்கியது. இதனால் இந்தியா முழுவதுமே சிறு, குறு வியாபாரங்கள், பெரிய அளவிலான வர்த்தகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டில் கறிக் கோழி விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு 150 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் 30 லட்சம் கிலோவிற்கு கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை தமிழகம் மற்றும் இதர அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக கறிக்கோழி உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு 8 நாட்களில் பல கோடி ரூபாய் அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில்லறை தட்டுப்பாடு காரணமாக கறிக்கோழி விற்பனையும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தொடர்ந்து காணப்படும் சில்லறை மற்றும் பண முடக்கப் பிரச்சனையால் கறிக்கோழி விலை நிர்ணயத்தைகாட்டிலும் கிலோவுக்கு 20 ரூபாய் வரை கொள்முதல் விலையை குறைத்து வழங்க வேண்டியிருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன் கூறும் போது, மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் சில்லறைத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனை சரிந்து வாரத்தில் ஒரு கோடி கிலோ கறிக்கோழி தேக்கம் அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதனால் கடந்த 8 நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு பண்ணையாளர்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது வறட்சி காரணமாக தீவன மூலப்பொருள்கள் விலையும் உயர்ந்து வருவதால் அவற்றையும் ஈடு செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று வாங்கிலி சுப்பிரமணியன் கூறினார்.