திசை மாறிய புயல்... தமிழகத்தில் நவ.10 வரை பெரிய மழைக்கு வாய்ப்பில்லை...
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக கடந்த 30ம் தேதி தொடங்கியது. அன்றுமுதல் தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழையும் பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது.
கடந்த ஆண்டு மிரட்டிய மழையைப் போல இதுவரை பெரிய அளவில் கனமழை பெய்யவில்லை. தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தேனி, மதுரை, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்து வருகிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததால் மழைக்கு வாய்ப்பில்லாமல் போனது. இன்னும் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து, 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை. மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் லேசான சாரல் மழை மட்டுமே விழக்கூடும். இதனால் வெப்பம் அதிகரிக்கும்.
இருப்பினும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது.
அதன்படி, நேற்று அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 80 மி.மீ, ராமநாதபுரம் மாவட்டம் காமகோடி, கமுதி, ராஜபாளையம் பகுதிகளில் தலா 50 மி.மீ, சிவகாசியில் 40 மி.மீ, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் தலா 30 மி.மீ, கோவில்பட்டி, உசிலம்பட்டி, செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் 20 மி.மீ மழையும் பெய்தது.