முதல்வர் ஜெயலலிதா பிரதமராக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: தேவ கவுடா
கோவை: லோக்சபா தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்போம் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நமது நாட்டை கடந்த 10 ஆண்டாக காங்கிரசும், அதற்கு முன்னர் பாரதிய ஜனதாவும் ஆட்சி செய்தன. ஆனால் இந்த இரு கட்சிகளுமே மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை அறிவித்ததில் எந்த ஒரு பயனுமே இல்லை. பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத்தை போல இந்தியாவை மாற்றுவார் என்பதையெல்லாம் ஏற்க முடியாது.
பிரதமர் பதவி போட்டியில் நான் இல்லை
யார் பிரதமராக வர வேண்டும் என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்வார்கள். பிரதமர் பதவி போட்டியில் நான் இல்லை.
மாநில கட்சிகள் உதவியுடன்.
லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகள் தான் முக்கியத்துவம் பெறும். நானும், நரசிம்மராவும் மாநில கட்சிகள் உதவியுடன் தான் பிரதமர் பதவி வகித்தோம்.
யார் யார் போட்டியில்..
லோக்சபா தேர்தலில் தற்போது மாநில முதல்வர்களான நிதிஷ்குமார், ஜெயலலிதா மற்றும் முலாயம்சிங் ஆகியோர் பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளது.
ஜெக்கு ஆதரவு
அப்படி ஒரு வாய்ப்பு உருவானால் ஜெயலலிதா பிரதமராக நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.
பார்லி. குழு தலைவர்கள்
டெல்லியில் நாளை அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
அரசியல் தலைவர்கள் ஆலோசனை
பிப்ரவரி 3-வது வாரத்தில் கட்சித்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு முன்னாள் பிரதமர் தேவ கவுடா கூறினார்.
ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா பிரதமராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.