போலீஸ் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் கோவில் - அலறும் பக்தர்கள்
போலீஸ் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் கோவில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.
ராமேஸ்வரம்: கோவில் பாதுகாப்பு என்ற பெயரில் ராமநாதசுவாமி கோவிலைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டனர் போலீஸார். இதனால் பக்தர்கள் தாக்கப்படுகின்றனர்' என வேதனைப்படுகின்றனர் ராமேஸ்வரம் கோவிலைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலுக்கு வடநாட்டு பக்தர்கள் ஆண்டுமுழுவதும் வருகை தருவது வழக்கம். தமிழகத்தைவிடவும் ராமநாதசுவாமி மீது வடநாட்டவருக்குக் கூடுதல் பக்தி.
இங்குள்ள ராமர் தீர்த்தம், சீதா தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நடக்கும் வசூல் சம்பவங்கள், பக்தர்களை கொதிக்க வைத்தாலும் இதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கோவிலுக்குள் நுழைவது முதல் சிவனை தரிசிப்பது வரையில் அனைத்துமே கட்டணமாக மாறிப் போய்விட்டது.
மாநில நிர்வாகி
இந்நிலையில், ராமேஸ்வரம் கோவிலில் தற்போது நடந்து வரும் சம்பவங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் சி.ஐ.டி.யூ மீனவர் அமைப்பின் மாநில நிர்வாகி சி.ஆர்.செந்தில்வேல். இவர் ராமேஸ்வரத்தில் வசித்து வருகிறார்.
நிர்வாகம் முழுவதும்...
இவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ' இராமநாதசாமி கோவிலில் பாதுகாப்பு என்கிற பெயரில் ராமேஸ்வரம் கோவில் நிர்வாகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுபாட்டில் சென்றுவிட்டது. கோயிலுக்குள் செல்லும் உள்ளூர்வாசிகள், மற்றும் வடமாநில யாத்ரீகர்களிடம் கடுமையான அடக்குமுறையை செலுத்துகிறார்கள்.
கடுமையாக தாக்குதல்
14-6-2018 காலை 10 மணியளவில், கிழக்கு கோபுரநுழைவு வாயிலில் வரிசையில் வரமறுத்ததாக கூறி வடமாநில பெண்கள் உட்பட பக்தர்களை பணியில் இருந்த தலைமை காவலர் சபாபதி மற்றும் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அடி பொறுக்காமல் அலறியடித்து ஓடிய பக்தர்களை உள்ளூர் மக்கள் ஆறுதல் கூறி, நடந்த சம்பவத்தை புகார் செய்ய அறிவுறுத்தினார்கள்
சபித்தனர்
வடமாநில பக்தர்களோ கோவிலுக்கு வந்த இடத்தில் காவல்துறையை பகைத்துக் கொள்ள பயந்து கொண்டு புகார் கொடுக்காமல், ராமேஸ்வரம் ஷேத்திரத்தையும் தமிழ்நாடு காவல்துறையையும் கடுமையாக சபித்து சென்றுள்ளனர்.
காவல் துறை
இதுபோல் பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. எனவே மாவட்ட காவல்துறை சம்மந்தப்பட்ட நேரத்தில் கோவில் நுழைவுவாயில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின், அடிப்படையில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோவிலில் காவல்துறை சாமானிய மக்களிடம் அதிகாரம் செய்வதை நிறுத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.