பாலக்கோடு ஆபாசப் பட சிவராஜின் தந்தை மரணம் - 3 நாள் பரோலில் விடுதலை
தர்மபுரி: தர்மபுரி அருகே பாலக்கோட்டில் வட்டிக்குக் கடன் வாங்கிய பெண்களின் கற்பை சூறையாடிய நிதி நிறுவன அதிபர் சிவராஜின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு 3 நாள் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலக்கோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் நிதி நிறுவன அதிபர் சிவராஜ். இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார். பெரும்பாலும் பெண்களுக்கே கடன் கொடுப்பார். கடன் கொடுக்க முடியாத பெண்களை தனது பண்ணை இல்லத்திற்கு வரவழைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு செய்வார். இதை வீடியோவிலும் படமாக்கிக் கொள்வார்.
இந்தப் பெண்களிடம் பேசி பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ஒரு பெண்ணையும் தனது அலுவலகத்தில் வேலைக்கு வைத்திருந்தார். அவர்தான் இப்பெண்களை சிவராஜின் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
சிவராஜ் தனது காமக் களியாட்டத்தை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். செல்போன் பழுதானதால் அதை ரிப்பேர் செய்யக் கொடுத்தபோது, அதில் இருந்த வீடியோக் காட்சிகளை செல்போன் பழுது பார்க்கும் நபர் பதிவு செய்து காப்பி போட்டு சிடியாக்கி விற்று விட்டார். இதனால் சிவராஜின் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
அவரைப் போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிவராஜின் தந்தை இறந்து விட்டார். இதையடுத்து தன்னை 5 நாள் பரோலில் அனுமதிக்குமாறு சிவராஜ் தான் அடைக்கப்பட்டுள்ள சேலம் சிறையில் விண்ணப்பித்தார். ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருக்கு 3 நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிவராஜை அழைத்து செல்வதற்காக தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 4 பேர் சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் பலத்த பாதுகாப்புடன் சிவராஜை பாலக்கோட்டுக்கு அழைத்து செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications