வேட்டி கட்டக் கூடாது என்று கூறுவதை எப்படித் தடுக்க முடியும்?- உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: வேட்டி கட்டுவதைத் தடுப்பது எப்படி சட்ட விரோதமாகும். ஒரு தனியார் கிளப்பின் விதிமுறைகளில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும். இதில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதைச் சட்டசபைதான் செய்ய முடியும். அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பான வழக்கையும் அது வேறு டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் கார்த்தி. இவர் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கிளப்பில் கடந்த 11-ந்தேதி நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், தமிழக கலாச்சார உடையான வேட்டி சட்டை அணிந்து சென்றுள்ளார்.
ஆனால், அந்த கிளப் ஊழியர்கள், தங்களது கிளப்பின் விதிகளின்படி வேட்டி கட்டி வரும் நபர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த செயல் சட்ட விரோதமாகும். ஆடை கட்டுப்பாடு தொடர்பாக விதிகளை உருவாக்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மற்றும் சட்ட விரோதமானது ஆகும்.
எனவே, வேட்டி கட்டி வந்தால் அனுமதி கிடையாது என்று விதிகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கிளப், சென்னை அண்ணா சாலையில் உள்ள மெட்ராஸ் ஜிம்கானா கிளப், ஆர்.ஏ.புரத்தில் உள்ள மெட்ராஸ் போட் கிளப் ஆகிய கிளப்புகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை நிறுத்தி வைக்கவும் (சஸ்பெண்டு செய்யவும்), இந்த கிளப்புகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கார்த்தி கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கும், நீதிபதிகளுக்கும் இடையே நடந்த வாதம்...
வழக்கறிஞர்: கடந்த 11-ந்தேதி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் வேட்டி கட்டி சென்ற நீதிபதி தடுத்து நிறுத்தப்பட்ட துரதிருஷ்டவமான சம்பவம் நடந்துள்ளது.
நீதிபதிகள்: அது ஒரு தனியார் கிளப். அந்த கிளப்பில் உள்ள கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும் என்று எப்படி இந்த கோர்ட்டினால் உத்தரவிட முடியும்? ஒரு தனியார் கிளப்பை எப்படி நிர்பந்தம் செய்ய முடியும்?
வழக்கறிஞர்: வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி கிடையாது என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
நீதிபதிகள்: அது எப்படி அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்?
வழக்கறிஞர்: அந்த கிளப்பில் பொது நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் நீதிபதி வேட்டி கட்டி சென்றதால், அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர்.
நீதிபதிகள்: அது பொது நிகழ்ச்சி அல்ல. சிலர் கலந்துக் கொண்ட புத்தக நிகழ்ச்சி. அதிலும், நீதிபதி விருந்தாளியாகத்தான் சென்றுள்ளார். இதுசம்பந்தமாக, நடவடிக்கை எடுக்க சட்ட மன்றம்தான் சரியான அமைப்பு. அந்த அமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்கட்டுமே? அவர்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியும். இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.