அதே பிப்ரவரி... மீண்டும் கூவத்தூர் கூத்துகளுக்கு ப்ளான் பண்ணும் தினகரன் கோஷ்டி
Recommended Video
சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என்பதால் மீண்டும் கூவத்தூர் கூத்தை அரங்கேற்றுவதற்கான ஸ்கெட்ச் போட்டு வேலைகளை செய்து வருகிறதாம் தினகரன் தரப்பு. ஆனால் இன்னொரு கூவத்தூர் நடக்கக் கூடாது என்பதற்காக தினகரன் தரப்புகளுக்கு செக் வைப்பதில் ஆளும் அதிமுக படு மும்முரமாக இருக்கிறதாம்.
ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் நடவடிக்கையில் பெருமளவு மாற்றம் வந்துவிட்டது. தமிழக மக்கள் உங்கள் தலைமையைத்தான் விரும்புகிறார்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு தனித்துவம்மிக்க ஒருவராக மாறிவிட்டீர்கள். அ.தி.மு.கவின் எதிர்காலமே உங்கள் கையில்தான் இருக்கிறது' என அவரைச் சுற்றியுள்ளவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
சசிகலாவையும் தாண்டி அவர் வளர்ந்துவிடுவார் என்ற பொருமலும் மன்னார்குடி கோஷ்டிகளுக்குள் பரவிக் கிடக்கிறது. தகுதிநீக்க வழக்கு ஒன்றுதான் தினகரன் கண்முன்னால் இருக்கும் ஒரே ஆயுதம்.
தினகரனின் பேச்சு
இந்த வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் சட்டசபையில் தனது ஆதரவாளர்கள் எண்ணிக்கை கூடிவிடும். நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுவிட்டால், எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்கச் செய்வது என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது. சில விஷயங்களில் இருந்து ஒதுங்கிவிட்டால், இந்த அரசு அப்படியே நீடிக்கும்' என ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் தினகரன்.
ஜெ. பாணி நடவடிக்கை இல்லை
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவர், அரசு அதிகாரத்தை அமைதியாக நகர்த்திக் கொண்டு போகிறார் முதல்வர். சசிகலா குடும்பத்துக்கு எதிராக இன்னும் உக்கிரமான நடவடிக்கையை அவர் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா பாணியில் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சூழல் இன்னும் வரவில்லை என நினைக்கிறார்.
தொழில்களை முடக்காதீர்
காரணம், மன்னார்குடி குடும்பங்களுக்கு வேண்டப்பட்ட சில எம்.எல்.ஏக்கள், ' சின்னம்மா குடும்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்துவிட வேண்டாம். அவர்களுடைய தொழில்களை முடக்கும் வேலைகளையும் செய்ய வேண்டாம். இந்த அரசுக்கு நாங்கள் ஆட்சிக்காலம் முழுவதும் ஆதரவு கொடுப்போம்' எனப் பேசி வருவதுதான். இதை உணர்ந்துதான் தலைமையில் உள்ளவர்கள் மௌனம் காக்கிறார்கள். ஓபிஎஸ் தரப்பினரின் டிமாண்டுகளும் மைத்ரேயன், முனுசாமி உள்ளிட்டவர்களின் பேச்சுக்களையும் அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
வியூகம் வகுக்கும் கோட்டை
இதை உணர்ந்துதான், தலைமைக் கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் ஓபிஎஸ் தரப்பினர் புறக்கணித்தனர். தகுதிநீக்க வழக்கு முடிவுக்கு வந்துவிட்டாலும், சட்டசபைக்குள் இவர்கள் நுழைந்துவிட முடியாத அளவுக்கு சட்டசிக்கல்களை ஏற்படுத்தும் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இதுகுறித்து சட்டவல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையும் நடந்து வருகிறது.
செக் வைக்கும் அதிமுக
மீண்டும் கூவத்தூர் பாணியிலான அரசியல் அரங்கேற வேண்டும் என தினகரன் தரப்பினர் முடிவு செய்துவிட்டனர். அதற்கேற்ப, ஆளும்கட்சி தரப்பில் இருந்து பத்து எம்.எல்.ஏக்களை வளைத்துக் கொண்டு போவதற்கும் முடிவு செய்திருக்கிறார். இதற்கு இடம் கொடுக்காத வகையில், சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஆலோசித்து வருகின்றனர் அமைச்சர்கள்" என்றார்.