அறிவு, அக்கறை, நிர்வாகத் திறமை, துடிப்பு.. அடடா அடடே தினகரன் அசத்துறாரே!
ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களில் நிர்வாகத் திறன் கொண்டவர் தினகரன் என்கிறது பேரா. ராஜநாயகம் கருத்து கணிப்பு முடிவுகள்
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களில் நிர்வாகத் திறன், சமூக அக்கறை என பலதரப்பட்ட திறனாய்வில் தினகரன் முன்னிலை வகிப்பதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.கே. நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.
மேலும் இரட்டை இலை சின்னத்தை போராடி பெற்ற அதிமுகவுக்கு இந்த தேர்தல் என்பது கடும் சவாலாகவே உள்ளது. அதிமுகவின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள திமுகவும் முயற்சி மேற்கொள்கிறது.
கருத்து கணிப்பு முடிவுகள்
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் கிடைத்த விவரங்கள் பற்றி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், வேட்பாளர்களின் அறிவாற்றல், துணிச்சல், நிர்வாகத் திறன், துடிப்பான செயல்பாடு, ஊடக சந்திப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை ஆகியவற்றில் கருத்துகணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
வேட்பாளர்களின் திறனாய்வு
வேட்பாளர்களின் ஆளுமை குறித்து பல்வேறு அம்சங்களைத் திறனாய்வுக்கு உட்படுத்தும் தொகுதி மக்களின் மதிப்பீட்டில் முன்னிலை பெறும் 5 வேட்பாளர்களில் தினகரனே முதலிடத்தில் உள்ளார். அறிவாற்றலில் தினகரனுக்கு ஆதரவாக 72 சதவீதம் பேரும், மருதுகணேஷுக்கு 68 சதவீதமும், மதுசூதனனுக்கு 61 சதவீதமும், கலைகோட்டுதயத்துக்கு 54 சதவீதமும், கரு.நாகராஜனுக்கு 34 சதவீதமும் தெரிவித்துள்ளனர்.
துணிச்சல் நடவடிக்கை
துணிச்சலான செயல்பாடுகளிலும் தினகரனே முதலிடத்தில் உள்ளார். அவருக்கு துணிச்சல் அதிகம் உள்ளதாக 89 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மருதுகணேஷுக்கு 65 சதவீத மக்களும், மதுசூதனனுக்கு 42 சதவீத மக்களும் கலைகோட்டுதயத்துக்கு 57 சதவீத மக்களும் கரு.நாகராஜனுக்கு 30 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர்.
துடிப்பான செயல்
இதேபோல் நிர்வாகத் திறன், துடிப்பான செயல்பாடுகளில் தினகரனுக்கு 80 மற்றும் 85 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். ஊடக சந்திப்பிலும் தினகரன்தான் நெம்பர் 1.
வெகுஜன உறவு
சமூக அக்கறை கொண்ட வேட்பாளர்களில் தினகரனுக்கு 70 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களுடன் மக்களாக இருப்பதில் 75 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார் ராஜநாயகம்.
தினகரன்தான் நம்பர் 1
ராஜநாயகம் குழுவினர் எடுத்துள்ள கருத்து கணிப்பில் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவது யார், பிரபலமடையும் சின்னம், வேட்பாளர்களின் திறனாய்வு என அனைத்து விதத்திலும் மக்கள் தினகரனையே தேர்வு செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க அதிமுகவின் எதிர்ப்பு அலையாகவே பார்க்கப்படுகிறது. பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு சமூக அக்கறை என்பது 35 சதவீதம் மட்டுமே உள்ளதாக கூறும் விஷயமும் கவனிக்கத்தக்கது.
நாம் தமிழரை விட பாஜக படு மோசம்
இதில் என்ன விசேஷம் என்றால் மாநிலக் கட்சியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை விட தேசியக் கட்சியான பாஜகவின் வேட்பாளர் கரு. நாகராஜன் படு மோசமான மார்க் எடுத்துள்ளார் என்பதுதான்.