புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்பட 6 பேரும் புழல் சிறையில் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை: சென்னை புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உள்பட 6 பேர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு கடந்த வியாழக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தை இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினர். இதனால் முக்கிய பாலமான அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து போக்குவரத்து சரி செய்தனர். இருப்பினும் கௌதமன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோருக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அன்று மாலையே புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 6 பேரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 2 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று கௌதமன் உள்ளிட்ட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.