கதிராமங்கலத்தில் நுழைய நாம் தமிழர் கட்சியினருக்குத் தடை... சீமான் ஆவேசம்!
கதிராமங்கலம் கிராமத்தில் நுழைய நாம் தமிழர் கட்சியினருக்கு தடை மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: கதிராமங்கலம் கிராமத்தில் நுழைய நாம் தமிழர் கட்சியினருக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். கதிராமங்கலத்தில் நிறம் மாறும் உணவு குறித்து விஞ்ஞானி விளக்கம் அளிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கதிராமங்கலத்தில் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், சீமான், முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சீமான் நிலத்தடி நீர் பாதிக்கப்படவில்லை என்றால் சாதம் நிறம் மாற என்ன காரணம் என்று அவர் கேள்வி எழுப்பினார். கதிராமங்கலத்தில் நிறம் மாறும் உணவு குறித்து விஞ்ஞானி விளக்கம் அளிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஒரே திட்டத்தை வெவ்வேறு பெயரில் மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துகிறது என்று சீமான் குற்றம் சாட்டினார். மேலும் கதிராமங்கலம் கிராமத்தில் நுழைய நாம் தமிழர் கட்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் மக்களின் போராட்டத்தை காவல்துறையினரை கொண்டு அரசு முடித்து வைப்பது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டது என்றும் அவர் சாடினார்.