தினகரன் 'அமைப்பில்' பதவி கிடைக்கலையே.. மேலூர் கூட்டத்தை புறக்கணித்த திவாகரன் மகன் ஜெயானந்த்!
தினகரன் அமைப்பில் பதவி கிடைக்காததால் மேலூர் கூட்டத்தைப் புறக்கணித்தாராம் திவாகரன் மகன் ஜெயானந்த்.
சென்னை: தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தமக்கு முக்கிய பதவி எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் மேலூர் கூட்டத்தைப் புறக்கணித்தாராம் திவாகரன் மகன் ஜெயானந்த்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ' தனி அமைப்பை' அறிவித்துவிட்டார் தினகரன். ' அதிமுகவை மீட்டெடுக்கும் வரையில் குக்கர் சின்னமும் இந்தக் கட்சியின் பெயரும் செயல்படும்' எனப் பேசியிருக்கிறார் தினகரன்.
தனிக் கட்சி தொடக்கவிழாவை திவாகரன் மகன் ஜெயானந்த் புறக்கணித்துவிட்டார். அவரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறார்' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.
மேலூரில் தினகரன் அமைப்பு உதயம்
மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அமைப்பின் பெயரை அறிவித்தார் டி.டி.வி.தினகரன். 108 அடி உயர கொடிக் கம்பத்தில் ஜெயலலிதா படம் இடம்பெற்ற கொடியை ஏற்றி உரையாற்றினார்.
ஜெயானந்த் அதிருப்தி
அவரது உரை நடந்து கொண்டிருந்த அதேநேரத்தில் திவாகரன் குடும்பத்தில் பெரிய புயல் வீசிக் கொண்டிருந்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி வட்டாரத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், " இளவரசி குடும்பத்துக்கும் தினகரனுக்கும் இடையில் நேரடி மோதல் வெடித்துக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணபிரியாவின் தினகரன் எதிர்ப்பை அனைவரும் அறிவார்கள். அதேநேரம், போஸ் மக்கள் பணியகம் என்ற பெயரில் தனி இயக்கத்தை நடத்தி வருகிறார் ஜெயானந்த். ' தினகரன்தான் எங்கள் தலைவர்' என வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்திலும் தினகரனுக்கு ஆதரவாகப் பேட்டியளித்தார் ஜெயானந்த்.
மேலூரில் விவேக் முகாம்
ஆனால், தினகரனின் புதிய கட்சி தொடக்கவிழாவில் அவர் தென்படவில்லை. எதிரானவராகக் கருதப்படும் விவேக் ஜெயராமன் முதல்நாளே மேலூருக்கு வந்துவிட்டார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு ஆலோசனையும் கூறிக் கொண்டிருந்தார். இதுதான் ஆச்சரியமளிக்கிறது" என விவரித்தவர்,
பதவியை எதிர்பார்க்கும் ஜெயானந்த்
" தனிக் கட்சி தொடங்கப்பட்டால், தனக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என விரும்பினார் ஜெயானந்த். இதுகுறித்து தன்னிடம் தினகரன் ஆலோசனை நடத்துவார்; முக்கியப் பொறுப்பு கொடுப்பார் என எதிர்பார்த்தார். ஆனால், அப்படிப்பட்ட எந்த சூழலுக்கும் தினகரன் இடம் கொடுக்கவில்லை. ' இது கட்சியல்ல, இரட்டை இலையை மீட்பதற்கு முன்பாக தற்காலிக ஏற்பாடாக செயல்படும் ஒரு அமைப்பு. அவ்வளவுதான்' என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்.
கட்சி தொடங்கினால் சிக்கல்கள்
மேலூர் குலுங்கும் அளவுக்குக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்ட தினகரன், கடைசிநேரத்தில் கிடைத்த சட்ட ஆலோசனைகளால், தனிக்கட்சி முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டார். ' தனக்கு முக்கியத்துவம் தராமல் கூட்டம் நடத்துகிறார்' என்ற கோபத்தில், வெளியூருக்குச் சென்றுவிட்டார் ஜெயானந்த். இதைப் பற்றி திவாகரனிடமும் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய ஜெயானந்த், மேலூர் கூட்டத்தைப் புறக்கணித்ததை குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்கவில்லை" என்றார் விரிவாக.