விடாத மழை.. பலத்த பேய்க்காற்று.. பஸ்களில் இடமில்லை.. சிக்கித் தவித்த தீபாவளிக் கூட்டம்!
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போக ஏண்டா கிளம்பினோம் என்று பலரும் சலித்துக் கொள்ளும் அளவுக்கு சென்னையின் வானிலை மக்களை இன்று வதைத்து விட்டது.
அடித்து நொறுக்கிய பேய் மழை மற்றும் சூறைக் காற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் கிளம்பியவர்களுக்கு அது பெரும் துயரமாக மாறிப் போனது.
கோயம்பேடு, பெருங்களத்தூர் பஸ் நிலையங்கள், அசோக் நகர், எழும்பூர் ரயில் நிலையம், சென்டிரல் என எங்கு பார்த்தாலும் மக்கள் மழைக்கு மத்தியில் பெரும் அவதியுடன் வந்து சேர்ந்ததைப் பார்க்க முடிந்தது.
சொந்த ஊர் பயணம்
நாளை தீபாவளிப் பண்டிகை. இதற்காக சொந்த ஊர்களுக்குப் போக விரும்பும் சென்னைவாசிகள் கடந்த சில நாட்களாகவே கிளம்ப ஆரம்பித்து விட்டனர். வெள்ளிக்கிழமை முதலே மக்கள் சாரை சாரையாக சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டுள்ளனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. இன்று சொல்லவே வேண்டாம். நாளை தீபாவளி என்பதால் நாளை காலைக்குள்ளாவது போய் விட வேண்டும் என்ற ஏக்கத்தில் இன்று காலை முதலே மக்கள் கிளம்பி வருகின்றனர்.
ரயில்களில் இடமில்லை
ஆனால் ரயில்களில் இடமில்லை. முன்பதிவு செய்யப்படாத ஒரு ரயில் இன்று காலை எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டது. அந்த ரயிலைப் பிடிக்க ஆயிரக்கணக்கில் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் முற்றுகையிட்டது. இதனால் ரயில் நிலையத்தில் நிற்கக் கூட இடமில்லாத நிலை.
அலை பாயும் மக்கள்
அது மட்டுமல்லாமல் பகலில் கிளம்பிய பல ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகளிலும் ஓபன் டிக்கெட் வாங்கியவர்கள் கட்டி ஏறி பயணித்து வருகின்றனர். இதனால் அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ரயிலே நிறைமாத கர்ப்பிணி போல காணப்படுகிறது.
பஸ்களில் எமக் கூட்டம்
ரயிலில் இடம் கிடைக்காத பயணிகள், பஸ்சில் செல்ல வருகின்றனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக வெள்ளிக்கிழமை 1106 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சனிக்கிழமை 1146 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 1194 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கில் பஸ்கள் விட்டும்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் கோயம்பேடு பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
சூறைக்காற்றுடன் பேய் மழை
இன்று காலையில் சென்னையில் பலத்த சூறைக் காற்றுடன் பேய் மழை கொட்டியதால் பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பெரும் சிரமத்தை மக்கள் சந்திக்க நேரிட்டது. இருப்பினும் எப்படியாவது ஊருக்குப்போய் சேர்ந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் இருந்ததால் மழையையும், கஷ்டத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.