இப்பவும் இருக்காங்க பாஸ்.. தீபாவளி பலகாரம் செய்ய அலுத்துக் கொள்ளாத அம்மாக்கள்!
சென்னை: தொட்டுத் தொடரும் பலகார பாரம்பரியம் நம்முடையது. அந்தக் காலத்து அதிரசம் இன்று வரை நம்முடைய நாவுகளில் நர்த்தனமாடுவதே அதற்கு சரியான சான்று. அந்தக்காலத்துல நாங்கெல்லாம் எப்படி கொண்டாடுனோம் தெரியுமா என்று அங்கலாய்க்கும் மக்களுக்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளது இந்தக் காலத்து இளம் அம்மாக்கள் சுட்டு அடுக்கி வைக்கும் பாரம்பரிய பலகாரங்களின் வரிசைகள்.
திருவிழாக்கள் உண்மையிலேயே மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட மிகச் சிறந்த ஏற்பாடு என்பதில் சந்தேகமே இல்லை. அதிலும் தித்திக்கும் இனிப்புகளுடன் கூடிய தி்ருவிழாக்கள் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தத் தவறாதவை.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சி, உற்சாகம், ஆனந்தம், கொண்டாட்டம் என பலவிதமான கலவையான உணர்வுகளை கொடுத்து வருகிறது. தீபாவளி என்றால் பட்டாசு நினைவுக்கு வருவது போல தீபாவளி பலகாரம்தான் அடுத்து மனதில் ஓடி வரும். முன்பு போல இப்போது வீடுகளில் பலாகரங்கள் செய்வது குறைந்து விட்டது என்பது உண்மைதான்.
இல்லம் தோறும் தித்திப்புப் பண்டங்கள்
தீபாவளிக்கு முதல் சில நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் நம் வீட்டுப் பெண்கள். இப்போதும் இது இருக்கிறது. ஆனால் அளவோடு செய்வது என்று மாறி விட்டது நிலைமை.
அம்மா சுட்ட மாதிரி வருமா
அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டிகள், அம்மாக்கள் எல்லாம் விதம் விதமாக சுட்டுப் போட்டார்கள். இத்தனைக்கும் அப்போதெல்லாம் மண்ணெண்ணெய் அடுப்பும், கரி அடுப்பும்தான். விடிய விடிய வியர்க்க விறுவிறுக்க பலகாரம் சுடுவது ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. இன்று வசதிகள் வந்தாலும் கூட அது கஷ்டமான காரியமாகி விட்டது.
இந்தக் காலத்து அம்மாக்களும் சும்மாவா என்ன
ஆனால் இக்காலத்திலும் அலுக்காமல் பலகாரங்களை சுட்டு அடுக்கும் பலே அம்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரியம் தொடர வேண்டும். நமது அம்மா நமக்கு செய்து தந்து சந்தோஷப்படுத்தியது போல நாமும் நமது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இன்றைய இளம் அம்மாக்களும் இதைத் தொடர்வே செய்கிறார்கள்.
குவைத்தைக் கலக்கும் நம்ம ஊர் இனிப்புகள்
இதோ குவைத்தில் வசிக்கும் திவ்யா மூர்த்தியும் அப்படிப்பட்ட இளம் அம்மாக்களில் ஒருவர். தஞ்சைக்காரர். நமது தீவிர வாசகி. கணவர், குழந்தையோடு குவைத்தில் வாசம். அங்கிருந்தாலும் கூட தீபாவளிக்காக கடந்த சில நாட்களாகவே தடபுடலாக தயாராகி கொண்டிருக்கிறார். பலகாரம் சுடுவதில் அப்படி ஒரு அலாதிப் பிரியம். பாரம்பரியமாச்சே விட முடியுமா என்று சொல்லியே பல பலகாரங்களை சுட்டு அடுக்கி வருகிறார் திவ்யா.
யாரும் மறக்க முடியாது
இதுகுறித்து திவ்யா கூறுகையில் அக்காலத்தில் எப்படி இருந்தது என்று சொல்வோரும் உள்ளனர். ஆனால் நாங்கள் எங்களது பாரம்பரியத்தை மறக்கவில்லை. இக்காலத்துப் பெண்களும் தீபாவளியை பாரம்பரியத்தோடுதான் கொண்டாடி வருகிறோம். இந்தக் காலத்து தலைமுறையும் பழமையை மறக்காமல்தான் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்தாலும் கூட மக்கள் பாரம்பரியமாக கொண்டாடுகிறார்கள். குவைத்திலும் கூட பாரம்பரியம் மறவாமல் கொண்டாடுகிறார்கள்.
கைப்பக்குவம் கடையில் வருமா
நம்ம் கையால் செய்து குழந்தைகளுக்கும், வீட்டாருக்கும் கொடுப்பதில் உள்ள சுகம் கடையில் வாங்கும் ஸ்வீட்டில் வருமா. மேலும் இந்த பாரம்பரியம் கடையில் நிச்சயம் இருக்கவே இருக்காது. நமது குழந்தைகளுக்கும் நமது பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுக்க இது நல்ல வாய்ப்பு என்கிறார் திவ்யா. உண்மைதான்.. அவரது குட்டிப் பையன் லக்ஷன் ஸ்வீட்டை டேஸ்ட் செய்து புன்னகைப்பதை பாருங்கள்.. அம்மா செஞ்சதாச்சே! எனது மகனுக்கு நான் பாரம்பரியத்தைக் கற்றுத் தருவேன். அவனது காலத்தில் இதெல்லாம் எப்படி இருக்குமோ. ஆனால் அவன் இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெருமிதத்தோடு கூறுகிறார் திவ்யா.
உண்மைதான்.. பாரம்பரியம் தொடர வேண்டும் என்பதில் இக்காலத்து தலைமுறையினரும் ஆர்வமாக இருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியதே.