விஜயகாந்தைப் பாராட்டி... தேர்தல் ஆணையத்தை திட்டி... தேமுதிக செயற்குழு தீர்மானம்
சென்னை: சென்னை தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சட்டசபைத் தேர்தலையொட்டி தேமுதிக, மக்கள்நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.சந்திரகுமார் தலைமையில் அதிருப்தியாளர்கள் தேமுதிகவில் இருந்து விலகினர்.
இந்த சூழ்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மெகா கூட்டணி அமைத்ததற்காக விஜயகாந்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிறுதாவூர் பங்களாவில் முதல்வர் ஜெயலலிதா கோடிக்கணக்கில் பணம் பதுக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தை முதல்வராக்க தீவிர பிரசாரம் செய்வது, அதிருப்தியாளர் சந்திரகுமாரை நீக்கியதற்கு ஒப்புதல் உள்ளிட்ட தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.