இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் திமுக சிக்கியது வரலாறு காணாத விசித்திரம்தான்...!
சென்னை: நிச்சயம் திமுகவுக்கு சந்தோஷமான நாட்கள், சில காலத்துக்கு இருக்கப் போவதில்லை என்பதை மறுக்க முடியாது. காரணம், எந்தப் பக்கம் போவது என்று தெரியாத அளவுக்கு கார்னர் செய்யப்பட்டு விட்டது திமுக- நாடாளுமன்றத் தேர்தலில் கண்ட மிகப் பெரிய தோல்வியால்.
வரும் நாட்களில் சரமாரியான சவால்களையும், சோதனைகளையும், சங்கடங்களையும் அது சந்திக்கப் போகிறது. கஷ்டங்களிலிருந்து மீள்வது திமுகவுக்கு சகஜம் தான் என்றாலும் கூட ஒரு கஷ்டத்திலிருந்து எழுந்து வெளியே வந்தால் காலடி எடுத்து வைப்பது அடுத்த கஷ்டமாக இருப்பதுதான் திமுகவை சற்று சங்கடப்படுத்தும் விஷயமாகும்.
கிட்டத்தட்ட பெரும் சிக்கலில் திமுகவை தள்ளிவிட்டுள்ளது இந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி.
டெல்லியில் வேலை இல்லை
கிட்டத்தட்ட டெல்லியில் இனிமேல் அரசியல்ரீதியாக திமுகவுக்கு எந்த வேலையும் இல்லை என்றாகி விட்டது. ஒரு எம்.பி கூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானதுதான். முன்பு போல ராஜ கம்பீரமாக டெல்லியில் திமுக இனிமேல் வளைய வர முடியாது. காரணம் 35 தொகுதிகளில் தோற்றதோடு அந்த செல்வாக்கு போய் விட்டது.
ஆதரவாக பேசக் கூட யாரும் இல்லை
தேர்தல் தோல்வியால் தமிழகத்தில் திமுக சந்திக்கும் சங்கடங்கள் உள்ளிட்டவற்றுக்காக டெல்லியில் ஆட்சியாளர்கள் மட்டத்திலும், இன்ன பிற வட்டங்களிலும் லாபி செய்து பேசக் கூட ஒருவரும் இல்லை.
ராஜ்யசபாவிலும் காலி
தற்போது திமுகவுக்கென்று உள்ள சில ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலமும் அடுத்தடுத்து முடியப் போவதால் அங்கும் திமுக முற்றிலும் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அட விட்டதைப் பிடிக்கலாம் என்றால் சட்டசபையிலும் பலம் இல்லாமல் வெறுமனே விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது கட்சி.
2ஜி வழக்கில் சிக்கல்
2ஜி வழக்கிலும் இனி நெருக்கடி அதிகரிக்கும். இதுவரை அப்படி இப்படி தாஜா செய்தும், மிரட்டியும் காங்கிரஸை சமாளித்து வழக்கிலிருந்து சற்றே தப்பி வந்தது திமுக. ஆனால் இனிமேல் அது முடியாது. பாஜகவை நெருங்க திமுக முயற்சித்தாலும் அதைக் கெடுக்க பலர் காத்திருக்கிறார்கள். குறிப்பாக ஜெயலலிதா புகுந்து விட்டால் திமுகவின் கதி அதோ கதிதான்.
தயாளு அம்மாள்
தயாளு அம்மாள்.. இதுதான் திமுக வட்டாரத்திற்கும், குறிப்பாக கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள மிகப் பெரிய கவலையாக உள்ளது. விசாரணைக்காக டெல்லிக்கு 26ம் தேதி தயாளு அம்மாள் போயாக வேண்டிய நிலை. ஆனால் அவருக்கு உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. ஆனால் நீண்ட நாட்களுக்கு இப்படி இழுத்தடிக்க முடியாது. என்ன செய்வது என்ற சீரியஸ் சிந்தனையில் மூழ்கியுள்ளது திமுக தலைமை.
மாநிலத்தில் என்னாகப் போகிறதோ
லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து விட்ட போதிலும் மீண்டு வரும் சரக்கு திமுகவிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் வரும் சட்டசபைத் தேர்தலுக்குள் புதிதாக ஒரு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. ஆனால், யார் சேருவார்கள்?
எடுபடாத ஸ்டாலின் சாணக்கியத்தனம்
திமுக தலைவர் கருணாநிதியின் சாணக்கியத்தனத்தில் ஒரு சதவீதம் கூட மு.க.ஸ்டாலினிடம் இல்லை என்பதை அக்கட்சியினரே ஒப்புக் கொள்வார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுவது, தன்னிச்சையாக செயல்படுவது கட்சிக்கு உகந்ததல்ல என்பதை ஸ்டாலின் தரப்பினர் புரிந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.
தேவை.. இன்னொரு கருணாநிதி
அண்ணாவுக்குப் பின் திமுகவை அப்படியே லட்டு போல சிந்தாமல் சிதறாமல் கட்டிக் காத்து இத்தனை காலமும் அதை கம்பீரமாக நடமாட வைத்து வருபவர் கருணாநிதி. ஆனால் இப்போது அடுத்தடுத்து வரப் போகும் சவால்களைச் சமாளித்து கட்சியை மேலும் கட்டமைக்க தேவை.. இன்னொரு கருணாநிதி.. அது யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..
லட்டு போல காக்காவிட்டாலும் பரவாயில்லை.. பூந்தியாக சிதறிப் போய் விடாமலாவது காக்க வேண்டுமே என்பதுதான் அடிப்படைத் திமுக தொண்டர்களின் மனக் குரலாக உள்ளது.