கருணாநிதி நலம்- மருத்துவமனைக்கு யாரும் வர வேண்டாம்: திமுக வேண்டுகோள்
கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனைக்கு யாரும் வர வேண்டாம் எனவும் திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு அவரை பார்க்க யாரும் வர வேண்டாம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
கருணாநிதிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி நலமுடன் இருக்கிறார்; மருத்துவமனையிலேயே தங்கி மேலும் சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஆகையால் அவரை பார்க்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திமுக அறிக்கை விவரம்:
காவேரி மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் தேறி, கடந்த 7ஆம் தேதி அன்று இல்லம் திரும்பி ஓய்வெடுத்து வந்த கருணாநிதிக்கு 15-12-2016 அன்று தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மீண்டும் காவேரி மருத்துவ மனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. நேற்றையதினம் காவேரி மருத்துவ மனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றுக் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு மூச்சு விடுவதை இலகுவாக்குவதற்கான "டிராகோஸ்டமி" சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது"" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டி யிருப்பதால், அவரை நேரில் பார்க்க வராமல் திமுகவினரும், நண்பர்களும், பார்வையாளர்களும் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.