பொதுக்கூட்டத்திற்கு குளங்களை மூடிய திமுகவினர்... போராடி மீட்ட அதிகாரிகள்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் பிரம்மாண்ட மாநாடு நடத்துவதற்காக மூடப்பட்ட 2 குளங்களை அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள ஆப்பூர் கிராமத்தில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள விடியல் மீட்பு பயணத்தின் நிறைவு விழா நடைபெறவுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் இதுவரை திமுக வரலாற்றில் இல்லாத அளவில் கூட்டம் திரள வேண்டும். தமிழக அரசியல் வரலாற்றில் இந்தப் பொதுக்கூட்டம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். இதற்காகப் பெரிய அளவில் மைதானம் தேர்வு செய்யும் பணி த.மோ.அன்பரசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
350 ஏக்கர் நிலம்
ஒரகடம் அருகே உள்ள ஆப்பூரில் பொதுக்கூட்டம் நடத்த 350 ஏக்கர் அளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைத் திரட்டச் சொல்லி அன்பரசன் உத்தரவிட்டிருக்கிறார். ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களாம்.
மூடப்பட்ட குளங்கள்
இது ஒருபுறம் இருக்க பொதுக்கூட்டம் நடக்க இருந்த இடத்தில் அரசுக்குச் சொந்தமான 2 குளங்களையும் பொக்லைன் இயந்திரத்தால் சமன்படுத்தி மூடியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள், வருவாய்த் துறையினரிடம் புகார் செய்தனர்.இதையடுத்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்டாட்சியர் தனலட்சுமி, துணை வட்டாட்சியர்கள் சரவணன், ஆறுமுகம், வேல்முருகன், செங்கல்பட்டு கிராமிய காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
குளங்கள் மீட்பு
அப்போது, அரசுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த 2 பொதுக்குளங்களை திமுகவினர் மண்ணால் மூடியிருந்தது கண்டறியப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் காவல்துறை உதவியுடன், குளத்தை மீட்ட கோட்டாட்சியர், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தைத் தூர்வாரி மீட்டெடுத்தார். மேலும், அந்தக் குளத்தின் அருகே, "அரசுக்குச் சொந்தமான இடம்' என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு
இதேபோல, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தையும், குடிசை மாற்று வாரியத்திற்குச் சொந்தமான அரசு நிலங்களையும் திமுகவினர் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டறிந்த கோட்டாட்சியர், அதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்கூட்டம் நடத்த இருந்த இடத்தில் குளங்கள் மூடப்பட்ட சம்பவமும், அரசு அதிகாரிகள் மீட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.