உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ.க்கள் கூட்டம்!
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் அதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தலை வரும் மே மாதம் 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்னும் இரண்டரை மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்த்லை தமிழகம் சந்திக்க உள்ளது.
அதேபோல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் சசிகலாவின் அதிகாரத்தை விரும்பாத ஓ.பன்னீர் செல்வம், அங்கிருந்து பிரிந்து வந்ததால், தற்போது அதிமுக சசி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என பிரிந்து இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் சிறையில் இருக்கிறார்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டி மற்றும் வெற்றி குறித்த ஆலோசனைக் கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தை பற்றிய விவரங்களையும் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளையும் வாய்ப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் நடக்கும் முதல் மாவட்ட செயலாளர் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.