டாப் கியருக்கு மாறும் திமுக.. அடுத்தடுத்து கூட்டங்கள்.. 25ம் தேதி முக்கிய முடிவுகள்??
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு படு வேகமாக தயாராக தொடங்கி விட்டது திமுக. அடுத்தடுத்து முக்கிய கூட்டங்களை நடத்தி வரும் திமுக அடுத்து வருகிற 25ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலுக்கு திமுக படு மும்முரமாக தயாராகி வருகிறது. மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் நிறுத்தி நிதானமாக அதே சமயம் அழுத்தமான முறையில் அது தயாராகி வருவதாக தெரிகிறது.
40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து விட்டது. தொகுதிக்கு 2 பேர் வீதம் 80 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணிகள் தீவிரம்
இதையடுத்து அடுத்தடுத்த வேலைகளில் திமுக தலைமை தீவிரமாகியுள்ளது. பணிகளை முடுக்கி விட ஆரம்பித்துள்ளது. வருகிற 25ம் தேதி முக்கிய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
வருகிற 25ம் தேதி மாவட்டச் செயலாளர்கள், லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக தலைமை கூட்டியுள்ளது. இதில் தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் விளக்கப்படவுள்ளது.
முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா
இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பேச்சும் அடிபடுகிறது. குறிப்பாக கூட்டணி குறித்த முக்கிய தகவல்களை மா.செக்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் கட்சித் தலைமை பகிரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
திமுக இப்படி அதிரடி பாய்ச்சல் காட்ட ஆரம்பித்துள்ளதை மற்ற கட்சிகள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளன.