உடனடியாக சட்டசபையை கூட்டுங்க, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்க.. ஸ்டாலின் கோரிக்கை
22 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: 22 எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான போரை நடத்துவதாக சுதந்திர தினத்தில் வீர உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் தமிழகத்தில் ஊழல் அணிகள் ஆட்சி பொறுப்பில் அமர உறுதுணையாக இருந்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 22 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுகவின் 19 எம்.எல்.ஏக்கள் அல்லாமல் கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்.
11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஓபிஸ் கடிதம் அளித்த போதே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எனவே தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் திமுக உரிய முடிவை எடுக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.