லோக்சபா தேர்தல்.. சத்தம் போடாமல் பக்காவாக ரெடியாகிறது திமுக!
சென்னை: லோக்சபா தேர்தல் எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் வெகு விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட ஆரம்பித்து விட்டன. இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் திருவிழாவில் தங்களது பங்கு என்னவென்ற கணக்குகளில் இப்போதே கமுக்கமாக ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதீத பலத்துடன் ஒரு கட்சியும் இல்லை என்பதே நிதர்சனம். அதிமுகவில் தலைவர்கள் இல்லை. திமுகவில் ஆலமரம் அடியோடு சாய்ந்து விட்டது. ஆனாலும் மு.க.ஸ்டாலின் என்ற முகவரியுடன் அது நிமிர்ந்தே நிற்கிறது. மறுபக்கம் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் வழக்கம் போல ஓசி சவாரிக்கு காத்துள்ளன.
ஒருமுனையில் கமல்ஹாசன் தனித்து களம் புகுந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்முனையில் பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் என்று "ரஜினி முருகன்" காத்துக் கொண்டிருக்கிறார். நிற்க.. எதிர்க்கட்சி திமுக என்ன செய்து கொண்டிருக்கிறது?. திமுக மீதான எதிர்பார்ப்பு என்பது மற்ற கட்சிகளை விட மிக மிக அதிகம்.. காரணம், வரும் தேர்தல்களில் திமுகவின் செயல்பாடும், அதன் பங்களிப்பும் தமிழகத்தின் வரலாற்றை மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதால்.
[ கருணாஸுடன் சேர்த்து 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்? ]

மெகா கூட்டணிக்கு முயற்சி
திமுகவைப் பொறுத்தவரை வலுவான, மெகா கூட்டணிக்கு அது முயற்சிக்கிறது. அதேசமயம், தேவையில்லாத லக்கேஜை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. Smart act.. big reap.. இதுதான் ஸ்டாலினின் திட்டம். அந்த வகையில் கட்சிகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து கூட்டணியை கட்டியமைத்து வருகிறாராம் ஸ்டாலின்.

காங்கிரஸ் இடம் உறுதியானது
திமுக கூட்டணியில் பாஜக இருக்குமா, காங்கிரஸ் இருக்குமா என்ற சந்தேகமும், பஞ்சாயத்தும் இடையில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அவையெல்லாம் வதந்தி என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாம். இடங்கள் கூட முடிவாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. திமுக தரும் தொகுதிகளைப் பெறுவதில் காங்கிரஸுக்கும் தயக்கம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மதிமுகவுக்கும் இடம்
சமீப காலமாக மு.க.ஸ்டாலின் மீது பாசத்தைப் பொழிந்து வரும் மதிமுகவுக்கும் திமுக கூட்டணியில் சீட் தரப்படுவதாக கூறப்படுகிறது. எத்தனை இடம் என்பது கூட உறுதியாகி விட்டதாம். எத்தனை கிடைத்தாலும் ஓகே என்று சொல்லி விட்டாராம் வைகோ. அவர் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் சூறாவளிப் பிரசாரத்தில் வைகோ ஈடுபடவுள்ளார்.

வேறு யார்
வேறு யாரெல்லாம் திமுக கூட்டணியில் இடம் பெறுகிறார்கள் என்றால் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றின் பெயர்கள் அடிபடுகின்றன. இடதுசாரிகள் வருவார்களா என்பது தெரியவில்லை.

எத்தனை இடத்தில் திமுக போட்டி
திமுகவைப் பொறுத்தவரை குறைந்தது 25 இடங்களில் அதிகபட்சம் 30 இடங்களில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை திமுக கூட்டணியில் பெரிய கட்சி ஏதாவது நுழைந்தால் அதற்கேற்ப தனது இடங்களை சற்று குறைத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

தெளிவான திட்டங்கள்
இடையில் வரும் இடைத் தேர்தல்கள் குறித்து ஸ்டாலின் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லையாம். லோக்சபா தேர்தலில் ஆணித்தரமான வெற்றியைப் பெற்று அகில இந்திய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மட்டுமே அவர் தற்போது குறியாக இருக்கிறாராம். இதனால்தான் அழகிரி சலசலப்பு உள்பட எதையுமே அவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறாராம். லோக்சபா தேர்தலை சந்திப்பது தொடர்பான திட்டங்கள் முடுக்கி விடப்பட்டு தெளிவாக ஸ்கெட்ச் போடப்பட்டு வருகிறதாம்.
பார்க்கலாம்.. ஸ்டாலின் ராஜதந்திரம் எந்த அளவுக்கு பலிக்கிறது என்பதை.












Click it and Unblock the Notifications