புதிய ரயில் போக்குவரத்துகள், விரைவு ரயில் திட்டங்கள், ராயபுரம் ரயில் முனையம்
80. இரயில் போக்குவரத்து
தமிழகத்திலுள்ள அனைத்து மீட்டர்கேஜ் இரயில் பாதைகளையும் அகல இரயில் பாதைகளாக மாற்றியமைக்கவும்;
தடையற்ற சாலைப் போக்குவரத்துக்கென நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து "ரயில்வே கிராசிங்"களும் அகற்றப்பட்டு, சுரங்கப்பாதை அல்லது மேம்பாலங்கள் அமைக்கவும்;
சிறுநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் விரைவு இரயில்களைப் பயன்படுத்த முடியாத நிலையில், திருச்சி, மதுரை, கோவை, விழுப்புரம் போன்ற இரயில் நிலையங்களிலிருந்து அருகிலுள்ள ஊர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் கொண்ட இரயில்பஸ்கள் இயக்கவும்;
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய வழித் தடங்களை, தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அகல ரயில் பாதைகள் அமைத்துச் செயல்முறைக்குக் கொண்டு வரவும்;
சென்னை, கன்னியாகுமரி இடையேயான அகல ரயில் பாதை தற்போது பெரும்பாலான இடங்களில் ஒரு வழிப் பாதையாக உள்ளது. இதனை இருவழிப் பாதையாக (னுடிரடெiபே) மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தி.மு.கழகம் வலியுறுத்தும்.
சென்னை ஐ.சி.எப். இரயில்பெட்டி தொழிற்சாலையின் இரண்டாவது அலகினை அமைத்திட மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்தப் பணி தொடங்கப்படவில்லை. இந்த இரண்டாவது அலகு உடனடியாக தொடங்கிட உரிய முயற்சிகளை தி.மு.கழகம் மேற்கொள்ளும்.
தற்போது ரயில் பெட்டிகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப் படுவதில்லை. மேலும் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் ஆகியவை முறையாகக் கிடைக்கப் பெறுவதில்லை. எனவே, ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் - மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆகியோர் சிரமமின்றி பயன்படுத்தவும் - மகளிருக்கு ரயில் நிலையங்களில் உரிய பாதுகாப்பு கிடைத்திடவும், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை தி.மு.க வலியுறுத்தும்.
81. பெருநகர விரைவு ரயில் திட்டம்
திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரம் வரை புதிய இரயில் பாதையை முதற்கட்டமாக அமைத்து, பின்னர் புதுச்சேரி வரை நீட்டிக்கவும்;
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளான மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய ஊர்களிலும் விரைவு ரயில் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கிடவும் முயற்சிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
82. மாற்றுத் திறனாளிக்கென தனி ரெயில் பெட்டிகள்
மாற்றுத் திறனாளிகள் எவ்வித இடையூறுமின்றி ரயில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக, அவர்களுக்கென 50 பிரேத்யேகப் படுக்கைகள் கொண்ட தனி ரயில் பெட்டி ஒன்று, ஒவ்வொரு ரயிலிலும் இணைக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.
83. இரயில்வே தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்
இரயில்வே துறையில் தொடர்புள்ள பணியாளர்கள், பொறியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள் ஆகிய பல்வேறு ரயில்வே துறைகளுக்களுக்கான தொழில்நுட்ப உயர்கல்வி பெற ஏதுவாக பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போன்ற "இரயில்வே தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்" ஒன்றினை தமிழகத்தில் அமைத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.
84. திருச்சி பொன்மலையில்
புதிய சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலை
தமிழகத்தின் மையப் பகுதியாகவும் - இரயில்வே துறைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காலி இடமும் - மனித வளமும் - போதிய கட்டுமான வசதிகளும் அமைந்துள்ள திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையின் திறன் முழுவதையும் சரக்கு ரயில் பெட்டி தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டால், இப்பணியினை தனியாருடன் தயாரிப்பு ஒப்பந்தம் செய்திடும் அவசியம் இருக்காது.
இதனை ரயில்வே துறையே செயல்படுத்தினால், தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாவதோடு, ரயில்வே துறையில் ஒரு மைல்கல் திட்டமாக இது அமைந்திடும். எனவே, திருச்சி, பொன்மலையில் புதிய சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.
85. இராயபுரத்தில் புதிய ரயில் முனையம்
சென்னையின் மிகப் பழமை வாய்ந்த இராயபுரம் ரயில் நிலையம் இன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், மற்றுமோர் ரயில் முனையமாக, சென்னை இராயபுரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற சென்னை மாநகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 2012ஆம் ஆண்டு இரயில்வே நிதிநிலை அறிக்கையில், இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் பின்னர், முறையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, சென்னை இராயபுரம் ரயில்நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றுவதற்கு தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும்.
86.நாகர்கோவில்- திருநெல்வேலி மாவட்ட ரயில்வழித் தடங்களை மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தற்போது திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ரயில் வழித் தடங்களை மதுரை ரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இணைக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.
தற்போது ஒரு சில துறைகளில் மட்டும் நடைமுறையில் இருக்கும் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அனைத்துப் பிரிவிலும் உள்ள ரயில்வே தொழிலாளர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.
87. இரயில்வே தொழிலாளர்கள் ஓய்வூதியம்
இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் உள்ள பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்திருப்பதைப் போல, இரவு பகலாக இந்திய மக்களுக்காகப் பணியாற்றி வரும் ரயில்வே தொழிலாளர்களுக்கு இப்புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.
88. விமானப் போக்குவரத்து
தூத்துக்குடி, சேலம் ஆகிய மாநகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்கள் போதிய வசதியில்லாமலும் - விமானங்கள் இரவில் இறங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லாமலும் உள்ளன. தூத்துக்குடி மாநகரம் தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகிவரும் மாநகரங்களில் ஒன்றாகும். எனவே, இந்த இரண்டு விமான நிலையங்களையும் மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.
89. விமான தொழில்நுட்ப பல்கலைக் கழகம்
பெருகி வரும் விமான போக்குவரத்துத் துறை தொடர்புடைய தொழில்நுட்ப உயர்கல்வியைப் பெறுவதற்கு ஏதுவாக, தமிழகத்தில் குறிப்பாக திருப்பெரும்புதூரில் "விமான தொழில்நுட்ப பல்கலைக் கழக வளாகம்" ஒன்றினை அமைத்திட விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட தி.மு.கழகம் பாடுபடும்.