NO.1 "கிறிஸ்தவம்".. எனக்கு "இந்த" கடவுள்தான் வேணும்.. அரசியலில் மதம் புகுந்துவிட்டது.. ஆ.ராசா பொளேர்
ஆ ராசா குன்னூர் பள்ளி விழாவில் பங்கேற்று, இன்றைய கல்வி முறை குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்
ஊட்டி: "சிலருக்கு மட்டுமே கல்வி சாத்தியப்பட்ட நிலையிலிருந்து மாற்றி, சாதாரண மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என எண்ணிய மதங்களில் கிறிஸ்தவம் முதலாவது மதம்" என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு தமிழக பாஜக மும்முரமாகி உள்ளது.. நீலகிரி தொகுதியில் எல்.முருகன், இந்த முறை போட்டியிட போவதாக பேச்சு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அடிபட்டது..
ஆனால், எல்.முருகன் பெயர் அடிபட்டபோதே, இவருக்கு போட்டியாக விபி துரைசாமியின் பெயரும் அடிபட்டது. ஆனால், சமீபத்தில் பாஜக தலைவர் நட்டா, கோவை வந்தபோதே நீலகிரி வேட்பாளர் யார் என்ற அனுமானம் வலம்வர துவங்கிவிட்டது. எல்.முருகன் நீலகிரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சமிக்ஞைகள் தென்பட்டன.
ஈபிஎஸ் முறையீடு ஏற்பு.. ஜன.30ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை.. முக்கிய உத்தரவு உண்டா? ஏன் முக்கியம்
டேன் டீ
கடந்த முறையே நீலகிரியை கேட்டு வாங்கியது பாஜக.. அதற்கு பிறகு, தொடர்ச்சியான களப்பணிகளையும் மேற்கொண்டு வந்தது.. சமீபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்று, இதனை உறுதி செய்திருந்தார். "உங்களால் டேன் டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால், பேசாமல் அதை மத்திய அரசுக்கு விற்றுவிடுங்களேன்" என்று அதிமுகவையும் சேர்த்து அண்ணாமலை சீறியிருந்ததும், மொத்த திராவிட கட்சிகளையும் கடுப்பாக்கியிருந்தது. அத்துடன், நீலகிரியை பாஜக யாருக்கும் இந்த முறை விட்டுத்தராது என்பதும், நட்டா வருகையின்போது நிரூபணமானது.
தெம்பு
அதுமட்டுமல்ல, எல்.முருகன். நீலகிரி தொகுதியின் சிட்டிங் எம்பி-யான ஆ.ராசா சமீபத்தில், இந்து மதம் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததால், நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.. மேலும், இந்து அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய இந்தப் போராட்டத்திற்கு பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் ஆதரவும் கிடைத்தது.. இதுவும் எல்.முருகனுக்கு புது தெம்பை தந்திருந்தது.. இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், நீலகிரி மலைக்கே, வலையை விரித்துள்ளார் முருகன் என்றார்கள்.. அப்படியானால், திமுக எம்பி, ஆ.ராசா என்ன செய்ய போகிறார்? எங்கே போட்டியிட போகிறார்? என்ற ஆர்வம் மிகுந்த வலம்வந்து கொண்டிருக்கிறது.
மோசமான வரலாறு
இந்நிலையில், நீலகிரி கூட்டத்தில் ஆ.ராசா பேசியுள்ளது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. குன்னூரில் தனியார் பள்ளியின் 157-வது ஆண்டு விழாவில் பங்கேற்று, மாணவ-மாணவிகள் மத்தியில் ராசா பேசியதாவது: "இந்தியாவில் கல்வி பற்றி பேச ஆரம்பித்தால், இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் விவாத பொருளாக மாறிவிடும்.. 3,000 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி பொதுமக்கள் கையில் சேர்த்த பெருமை ஆங்கிலேய ஆட்சிக்கு சேரும். இந்தியாவில் மட்டும்தான் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட ஒரு மோசமான வரலாறு கொண்ட மக்களாக நாம் இருந்திருக்கிறோம்.
இங்கிலீஷ்
சிலருக்கு மட்டுமே கல்வி சாத்தியப்பட்ட நிலையிலிருந்து மாற்றி, சாதாரண மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என எண்ணிய மதங்களில் கிறிஸ்தவம் முதலாவது மதம் என்பதை நான் மனமார ஒப்புக்கொள்கிறேன். நன்கு படித்து, கல்வி அறிவைப் பெற்ற பிறகு சாதி மதங்களைக் கடந்து மனிதனாக வர வேண்டும். ஆனால், இன்றைக்கு மதம் அரசியலில் புகுந்திருக்கிறது. நான் சாதாரண கிராமத்தில் படித்தவன். சிறு பிள்ளைகள் இங்கு ஆங்கிலம் பேசுவதைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது. இது போன்ற பள்ளிக்கூடத்தில் நான் நுழைந்ததே கிடையாது. வாழ்நாள் முழுக்க அரசுப் பள்ளியிலும், அரசுக் கல்லூரியிலும் படித்தேன். ஆனால், நான் பேசுகிற ஆங்கிலத்தை நாடாளுமன்றத்தில் யாருமே குறை சொன்னதில்லை..
குரான் பைபிள்
இங்கு பேசிய மாணவர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் வாசகங்கள் சொன்னார்கள்.. எல்லா மதங்களும் ஏற்புடையது தான் என்பதை வாசித்தனர்.. நான் எந்த மதத்திற்கும் எதிரி கிடையாது.. 'படித்தவனுடைய கல்வி அந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் எதிராக இருந்தால், அவன் விலங்கை விட கொடியவன்' என்று அம்பேத்கர் சொன்னார்.. படிப்பும் அறிவும் சக மனிதன் உயர வேண்டும் என்பதற்காக தான். நான் மனிதனை நேசிக்கிறேன். கடவுள் மேல் நம்பிக்கை இல்லை.. அன்பு, இரக்கம் தான் கடவுள் என்று சொன்னால், அப்படி ஒரு கடவுள் வேண்டும்" என்றார் ராசா.