பிரிட்ஜோ படுகொலை குறித்து தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சட்டசபையில் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சட்டசபையில் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது கச்சத்தீவை மீட்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று தொடங்கியது. அப்போது இறந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் மெய்யப்பன், பாலையா,விஸ்வநாதன், செல்லையாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்மையில் பிரிட்ஜோ என்ற 22 வயதான தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இருநாடுகளின் பேச்சுவார்த்தை முடிவுக்கு எதிராக இலங்கை அரசு செயல்படுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.