ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்களே இப்படியா? வெயிலில் காத்திருந்த கர்ப்பிணி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறாக டாக்டர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவமனைக்கு செல்ல வழியில்லாததால் சிகிச்சைக்காக ஸ்டெச்சரில் அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண் அரை மணி நேரமாக வெயிலிலேயே காத்திருந்துள்ளார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் நேற்று ஸ்தம்பித்துப் போனது, போராட்டம் எதுவும் நடக்கவில்லை. மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் தங்களது வாகனங்களை பாதையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் இந்த நிலை ஏற்பட்டது.
நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சுயநினைவிழந்ததால் மற்றொரு கட்டிடத்திற்கு சோதனைக்கு அழைத்து செல்வதற்காக ஸ்டெச்சரில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் டாக்டர்களின் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பாதையை மறித்து நின்றதால் சுமார் அரை மணி நேரம் அந்தப் பெண் மருத்துவமனை வாசலிலேயே சுள்ளென்ற வெயிலில் காத்திருந்துள்ளார்.

பிரசவத்திற்கு அழைத்து செல்ல முடியவில்லை
பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட பெண் டாக்டர்களின் பொறுப்பற்ற வாகன நிறுத்தத்தால் சரியான நேரத்தில் சிகிச்சை தர முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் முயற்சி எடுத்து காரின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து அவசரஅவசரமாக செயல்பட்ட பின்னரே கார்கள் பாதையில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அந்தப் பெண் மருத்துவமனைக்குள் இருந்த பிரசவ அறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

திருந்தாதவர்கள்
ஆனால் கொடுமைய பாருங்க ஏற்கனவே நிறுத்திய வாகனங்களை அப்புறப்படுத்த முடியவில்லையே என்று பொதுமக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இந்த களேபரங்களுக்கு மத்தியில் மற்றொரு நபர் வந்து காரை அசால்ட்டாக் ஏற்கனவே பலர் தவறான இடத்தில் நிறுத்தி இருந்த அதே இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.

பொறுப்பற்ற டாக்டர்கள்
டாக்டர்களுக்கென தனியான பார்கிங் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மருத்துவமனை முன்பே நிறுத்தி வருவதாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் டாக்டர்களிடம் இந்த விதிமீறல்களை எடுத்துச் சொல்ல பயப்படுகின்றனர். ஏனெனில் இதனால் தங்களது உறவினர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில் பார்க்கிங் பிரச்னை தொடர்பாக டாக்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை சூப்பிரண்டண்ட் தெரிவித்துள்ளார். எனினும் இந்த குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications