ஜெ.க்கு துரோகம் செய்த ஓபிஎஸ் அணிக்கு செல்லாதீர்.. அதிமுக பேச்சாளர்களிடம் கெஞ்சும் தினகரன்
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் அணிக்கு யாரும் செல்லாதீர்கள் என அதிமுக பேச்சாளர்களிடம் டிடிவி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் அணிக்கு யாரும் செல்லாதீர்கள் என அதிமுக பேச்சாளர்களுக்கு டிடிலி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவில் நிரந்தரமாக இருப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிமுக பேச்சாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஓபிஎஸ் அணிக்கு யாரும் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். கட்சியில் நிரந்தரமாக இருப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்றும் அவர் கூறினார். மேலும் அவர் பேசியதாவது,

ஆசை வார்த்தை கூறுவார்கள்
"இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளையும், தடைகளையும் தாண்டி வந்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறுவார்கள்.

நல்ல எதிர்காலம் இருக்கு
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் அணிக்கு யாரும் செல்லவேண்டாம். நமது அணியில் நிரந்தரமாக இருப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதை நான் உறுதியாக கூறுகிறேன்.

இயக்கத்தின் பணிகளை தொடர வேண்டும்
பல்வேறு சோதனைகளை தாண்டி, நீண்ட காலமாக செங்கோட்டையன் தன்னம்பிக்கையோடு நம்முடைய இயக்கத்தின் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறார். அவரைப்போல தன்னம்பிக்கையோடு நம்முடைய இயக்கத்தின் பணிகளை தொடரவேண்டும்" இவ்வாறு டிடிவி தினகரன் பேச்சாளர்களிடையே பேசினார்.

முதலில் ஆனந்த்ராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்பதாக தகவல் வெளியான உடனேயே அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நடிகர் ஆனந்த்ராஜ் அதிமுகவில் இருந்து விலகினார்.

ஓபிஎஸ் அணியில் இணைந்த மனோபாலா
இதைத்தொடர்ந்து நடிகர் மனோபாலா அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.இதேபோல் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார்.

ஓபிஎஸ் அணிக்கு செல்ல வேண்டாம்
நட்சத்திரப் பேச்சாளர்கள் ஒவ்வொருவராக சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கட்சி இருப்பதை எதிர்த்து அதிமுகவில் இருந்து விலகி வருகின்றனர். அவர்களை தடுக்கும் வகையில் டிடிவி தினகரன் பேச்சாளர்களிடம் ஓபிஎஸ் அணிக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications