சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு: கருத்து கூற கருணாநிதி மறுப்பு
சென்னை: மெரினா கடற்கரைச் சாலையில் இருந்து சிவாஜிகணேசன் சிலையை அகற்றினால் அதற்கான பலனை தமிழக அரசு அனுபவிக்க நேரிடும்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசினார்.
அப்போது செய்தியாளர்கள், எழுப்பிய கேள்விகளும், கருணாநிதி அளித்த பதில்களும்
ஆளுங்கட்சி விதிமீறல்
ஏற்காடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி விதிமுறைகளை மீறுவதாக உங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துக் கூறி வருகிறீர்கள். இதற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?
தேர்தல் ஆணையம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை; என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
விவசாயிகள் பிரச்சினை
எரிவாயு குழாய்களைப் பதிக்கும் பிரச்சினையில் உயர் நீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பினை எதிர்த்து, விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்படுகிறதே?
விவசாயிகளின் கஷ்டத்தையும், அவர்களுடைய கோரிக்கையையும் நான் கவனமாகப் பார்த்து வருகிறேன்.
உயர் நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் அளித்துள்ள தீர்ப்பு பற்றி?
நான் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி எப்போதும் விமர்சனம் செய்வதில்லை.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்களா?
வழக்காடுவதை விட இரு தரப்பாரும் பேசி, விவசாயிகளுக்கு பாதகமின்றி நன்மை ஏற்படுகின்ற வகையில் நல்ல தீர்வு காண வேண்டும் என்பது தான் என் கருத்து.
சிவாஜி சிலை மாற்றம்
உங்களுடைய நண்பர் சிவாஜி கணேசனுக்கு நீங்கள் தான் உங்கள் ஆட்சிக் காலத்தில் சிலை வைத்தீர்கள். ஆனால் இப்போது அந்தச் சிலையை அகற்ற வேண்டுமென்று அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்களே?
கண்ணகி சிலையையே எடுத்தவர்கள் இப்போது என்னுடைய நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை எடுக்க விரும்பினால், அதன் பலனை அவர்களே அனுபவிக்கட்டும்.
மின்வெட்டு பிரச்சினை
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் வெட்டுக்குக் காரணம், மத்திய அரசின் சார்பில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள திடீர் பழுதுகள் தான் என்றும், மத்திய அரசு சதி செய்கிறது என்றும் தமிழக முதல்வரே கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
இதைப் பற்றிய குற்றச்சாட்டினை தமிழக முதல் அமைச்சரே பிரதமருக்குக் கடிதம் மூலமாக எழுதியிருக்கிறார். அதற்குப் பிரதமரின் பதில் வந்த பிறகு அந்த விவரத்தை அறிந்து நான் விளக்கம் அளிக்கிறேன்.
சங்கரராமன் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதுபற்றி கருத்து கூற கருணாநிதி மறுத்துவிட்டார்.