காவல் நிலைய போலீசாரை வீட்டுப் பணிக்கு பயன்படுத்த கூடாது: கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு!
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மீண்டும் பதவி ஏற்றவுடன், சில காவல் நிலையங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வு செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது, ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ள போலீசாரில் சுமார் 15 பேர், உயர் போலீஸ் அதிகாரிகளின் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள் என்றும், இதனால் மக்கள் பணிக்கு போலீசார் இல்லாமல் அவதிப்படுவதாகவும் புகார் கூறியிருக்கிறார்.
இதுபற்றி விசாரணை நடத்திய கமிஷனர் ஜார்ஜ்க்கு, இன்ஸ்பெக்டர் ரவி சொன்ன புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், இதுபோன்ற நிலை சென்னையில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் இருப்பதும் தெரியவந்தது. துணை கமிஷனர் ஒருவர், தனது அலுவலக பணிக்காக 15 போலீசாரை வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு ஒன்றை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள போலீசார், காவல் நிலையங்களிலேயே பணிபுரிய வேண்டும், அவர்களை அதிகாரிகளின் அலுவலக பணிக்கும், ஏவல் பணிக்கும் பயன்படுத்தக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலுவல் பணிக்கு, காவல் இளைஞர் படையினரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கமிஷனர் ஜார்ஜ், தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.