ஜெ. நினைத்தால் இந்த நிமிடமே 7 தமிழர்களையும் விடுதலை செய்யலாமே.. ஏன் செய்யலை?- ராமதாஸ்
சென்னை: ஜெயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆனால் ஜெயலலிதா கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து பிடிப்பது போது கபட நாடகம் ஆடுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு மத்திய உள்துறை செயலருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது 7 தமிழர்களின் விடுதலையை தட்டிக்கழிக்கும் நோக்கம் கொண்ட முழுக்க முழுக்க அரசியல் லாபம் தேடும் செயலாகும்.
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களும் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எந்த வகையிலும் சம்பந்தப்படாதவர்கள் ஆவர். இராஜிவ் கொலை வழக்கில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி இவர்களை விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதனடிப்படையில் தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தை ஏற்று 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் கோரிக்கையும் ஆகும். ஏற்கனவே பலமுறை வலியுறுத்தப்பட்ட இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் பா.ம.க. மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. ஆனால், 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? என்பது தான் இப்போது விடை தேடப்பட வேண்டிய வினா ஆகும்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களை கருணை அடிப்படையில் விடுவிப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 18.02.2014 அன்று அறிவுறுத்தியிருந்த நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டு 19.02.2014 அன்று தமிழக அரசு கடிதம் எழுதியது.
ஆனால், அந்தக் கடிதத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்பே தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 7 பேரின் விடுதலையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தடுத்து நிறுத்தியது. அதற்கு பிறகு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அரசும், 7 தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது என உச்சநீதிமன்றத்தில் கடுமையாக வாதாடியது. அவ்வழக்கில் விசாரணை முடியாத நிலையில் இப்போதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கெல்லாம் மேலாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது முறையாக சீராய்வு மனு தாக்கல் செய்தது நரேந்திர மோடி அரசு தான்.
மொத்தத்தில் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதில் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான். இப்போது கூட ப.சிதம்பரம் ஊழல், பாரதிய ஜனதாவின் காவிக் கலாச்சாரம் ஆகியவற்றை முன் வைத்து நாடாளுமன்றத்தில் மோதிக் கொள்ளும் இரு கட்சிகளும் இந்த விஷயத்தில் கைகோர்த்துக் கொள்ளும். பொதுவுடமை பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த விஷயத்தில் இந்த கட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கும். காரணம் எல்லா தேசியக்கட்சிகளையும் பொதுப்புள்ளியில் இணைப்பது அவற்றின் தமிழர் விரோத நிலை தான்.
இந்த உண்மைகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரியாதவை அல்ல. இதை தெரிந்து கொண்டே 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஜெயலலிதா அனுமதி கேட்பதன் நோக்கம் தமிழக அரசியல் களத்தில் தமக்கு எதிராக உள்ள அனைத்து தேசியக் கட்சிகளையும் அம்பலப்படுத்துவது தானே தவிர, 7 தமிழர்களையும் விடுதலை செய்வது அல்ல.
ஜெயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு பரிந்துரைத்தால், 7 தமிழர்களும் இன்று மாலைக்குள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், அதை செய்யாமல், ஏற்கனவே முயற்சி செய்து தோல்வியடைந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-ஆவது பிரிவை பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோருவது கொக்கை நேரடியாக பிடிக்காமல், அதன் தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கொக்கின் கண்களை மறைத்த பிறகு பிடிக்கலாம் என்று காத்திருப்பதற்கு சமமாகும். இது ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஜெயலலிதா அரசின் இந்த நாடகத்தை மக்கள் அறிவர்; ஏமாற மாட்டார்கள்.
கடந்த காலங்களில் பலமுறை நான் வலியுறுத்தியவாறு அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்வது தான் நடைமுறை சாத்தியமான தீர்வாகும். எனவே, 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களது தேசியத் தலைமையின் நிலையை வழிமொழியப் போகின்றனவா? அல்லது அதற்கு மாறாக தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கப்போகின்றனவா? என்பதை இக்கட்சிகளின் மாநிலத் தலைமைகள் விளக்க வேண்டும்.''