விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்: உள்துறை செயலருக்கு பெற்றோர் மனு
சேலம்: எனது மகள் மரணத்தை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக உள்துறைச் செயலாளருக்கு விஷ்ணு பிரியாவின் தந்தை புகார் மனு அனுப்பியுள்ளார். விஷ்ணு பிரியாவின் பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யான விஷ்ணு பிரியா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்தவர்.
உயரதிகாரிகள் தொந்தரவு
இந்நிலையில், கோகுல்ராஜ் வழக்கை சரிவர விசாரிக்கவில்லை என உயர் அதிகாரிகள் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவை அடிக்கடி திட்டியதாகக் கூறப்படுகிறது. உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, குடும்ப பிரச்னை காரணமாக டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஆதாரமாக அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது என சேலம் மாவட்ட எஸ்.பி. செந்தில் தெரிவித்துள்ளார்.
விசாரணை தீவிரம்
தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை விவகாரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விஷ்ணுப்பிரியாவின் உடல் பிரேதப்பரிசோதனை இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இதற்காக அவரது பெற்றோர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சேலம் வந்துள்ளனர்.
பெற்றோர் புகார்
இந்த நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு மேலதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். தங்கள் மகளின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் எனவும், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பிரேத பரிசோதனை செய்ய கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
உள்துறை செயலருக்கு கடிதம்
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி, சேலம் காவல்துறை துணை தலைவர் வழியாக தமிழக உள்துறைச் செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், 'எனது மகள் செல்வி விஷ்ணு பிரியா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
சமூக விரோதிகள் தொந்தரவு
அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகளாலும் சில சாதிய, சமூக விரோதகளின் மூலமும் அச்சுறுத்தல் இருந்ததாக பலமுறை என்னிடம் கூறி இருந்த நிலையில், 18.9.2015ல் பணியில் இருக்கும்போதே தூக்கிட்டு இறந்ததாக தகவல் கிடைக்கப்பெற்று, அவரது சடலம் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன்.
சி.பி.ஐ. விசாரணை
எந்த சூழ்நிலையிலும் என் மகள் தற்கொலை செய்யக் கூடிய சூழல் கிடையாது. ஆகவே அவரது மரணத்தை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் பதிவு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி அளித்த பேட்டியில், "அதிகாரிகளின் தொந்தரவால் விஷ்ணு பிரியா மரணம் அடைந்திருக்கலாம். வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின் சில பக்கங்களை காவல்துறையினர் காட்டவில்லை. விஷ்ணு பிரியாவின் பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.
தோழி குற்றச்சாட்டு
இதனிடையே, காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய விஷ்ணுபிரியா தற்கொலை செய்தவுடன் அவரது தோழியும், கீழக்கரை துணை கண்காணிப்பாளரான மகேஸ்வரி, அதிரடியாக காவல்துறை உயரதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினார். அதிகாரிகளின் டார்ச்சரால் மட்டுமே விஷ்ணுபிரியா தற்கொலை செய்ததாக பகிரங்கமாக தெரிவித்தார்.
காவல்துறையினர் மறுப்பு
இதனை மறுத்த ஐ.ஜி சங்கர், 'விஷ்ணுபிரியா ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் 2 முறை அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் டி.எஸ்.பி. மகேஸ்வரியின் தகவல் அர்த்தமற்றது. ஏதோ உள்நோக்கத்தில் அவர் இதுபோன்ற தகவலை தெரிவித்துள்ளார்' என்றார்.
விஷ்ணு பிரியா உடல் ஒப்படைப்பு
இதனிடைய சேலம் அரசு மருத்துவமனையில் டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷ்ணு பிரியாவின் உடலுக்கு சேலம் சரக டிஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். விஷ்ணு பிரியாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.