சீர்காழி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... பள்ளிகளில் தண்ணீர் தேங்கியதால் கலெக்டர் அறிவிப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் விடுமுறை அறிவிப்பதாக கலெக்டர் லலிதா கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.
மயிலாடுதுறை மழை.. வந்தாலும் பிரச்சினை.. வரலைனாலும் பிரச்சினை! தண்ணீரால் கண்ணீர் விடும் விவசாயிகள்!
மயிலாடுதுறை பாதிப்பு
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. சீர்காழியில் மட்டும் வரலாறு காணாத வகையில் மழை பதிவானது. 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீர்காழியில் மழை பதிவானது. ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பதிவானது.
நிவாரண முகாம்களில் மக்கள்
மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் பள்ளிகளில் தண்ணீர் நுழைந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மெய்யநாதன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினர்.
கலெக்டர் அறிவிப்பு
இந்நிலையில் தான் சீர்காழியில் பல்வேறு பள்ளிகளில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அங்கு சென்று படிக்க இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளது. எனவே சீர்காழி தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.