ஈரோட்டில் இ-கோர்ட் – வக்கீல்களுக்கு வழக்கு குறித்த தகவல்கள் இனி எஸ்.எம்.எஸ் மூலம் வரும்!
ஈரோடு: நீதிமன்றத்தில் வழக்குகள் குறித்த தகவல்களை வழக்கறிஞர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கும் இ-கோர்ட் நடைமுறை ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட, கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் இத்திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த புதிய முறைப்படி "சி.ஐ.எஸ்" என்ற மென்பொருளைக் கொண்டு நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த மையத்தில் வழக்கறிஞர்கள் தாங்கள் ஆஜராகும் வழக்கு மற்றும் தங்களின் விவரம் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்த வழக்கறிஞர்களுக்கு வழக்கு எண், வழக்கு விவரம், வாய்தா தேதி போன்ற தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் வழக்கின் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக ஈரோட்டில் இதுவரை 150 வழக்கறிஞர்கள் தங்களின் செல்பேசி என்னை பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய வழக்குகள் குறித்த விவரங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இ-கோர்ட் முறையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.பி.இளங்கோ தொடங்கி வைத்தார். இத்திட்டம், மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் இந்த முறை படிப்படியாக பரவலாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.