இரட்டை இலைக்கு உரிமை கோரும் ஓபிஎஸ்.. சசியிடம் பதில் கேட்கும் தேர்தல் ஆணையம்
ஆர்.கே. நகரில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது பற்றி மார்ச் 20க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு ஓபிஎஸ் அணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவிற்கு மார்ச் 20க்கும் பதிலளிக்க வேண்டும் என்று சசிகலாவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது. ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனோஜ் பாண்டியன் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இந்த மனுவிற்கு மார்ச் 20க்குள் பதிலளிக்க வேண்டும் என்று சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா அளிக்கும் பதிலைப் பொறுத்து தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும்? அல்லது முடக்கப்படுமா? இரு அணிகளுமே சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.