தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.20 கோடி பறிமுதல்
சென்னை: சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து ரூ.20.40 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களில் இதுவரை சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ. 49 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.49 கோடியில் ரூ.20.40 கோடி தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தை அடுத்து அஸ்ஸாமில் அதிகபட்சமாக ரூ.11.13 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவில் ரூ.8.75 கோடியும், மேற்கு வங்கத்தில் ரூ.8.28 கோடியும், புதுச்சேரியில் ரூ.60.88 லட்சமும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தான் இந்த ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை ஆகும். தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் வரும் மே மாதம் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து மே 19ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.












Click it and Unblock the Notifications