25 கிலோ தங்க நகைகள்… ரூ.2 கோடி… பறக்கும் படை சோதனையில் பறிமுதல்
சென்னை: சென்னையில் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகனசோதனையில் மயிலாப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 21.5கிலோ தங்கநகைகளை கைப்பற்றினர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாப்பூர் லஸ்கார்னரில் புதன் மதியம் 12 மணிக்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
21 .5 கிலோ நகைகள்
அப்போது ஒரு காரில் 21.5 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் நகைகள் ஹஸ்மித் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. கடை ஊழியர் ஹர்வீந்தர் சிங்கும் மற்றும் ஒருவரும் இதை கொண்டு சென்றுள்ளனர். அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை காட்டினால் தங்கத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ. 60 லட்சம்
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ‘கேம்ப்' அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி முனிய சேகர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ‘டாடா இன்டிகா' காரில் இருந்து ரூ. 60 லட்சம் கைப்பற்றப்பட்டது.
கருவூலத்தில் சேர்ப்பு
அதில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ‘ஏ.டி.எம்' எந்திரங்களில் வைப்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் காட்ட வில்லை. இதையடுத்து காரில் இருந்த 60 லட்சம் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் ஆவடி கருவூலத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
ரூ.80 லட்சம் பறிமுதல்
சேலம் அரபிக் கல்லூரி அருகில் உள்ள சோதனைச்சாவடியில் நிரந்தரமாக சோதனையிடும் குழு அதிகாரி சேனாதிபதி தலைமையில் அதிகாரிகள் வாகனங்களை தணிக்கை செய்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30மணி அளவில் பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கோழிகோட்டிற்கு செல்லும் தனியார் பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் கோழிக்கோட்டை சேர்ந்த ரியாஷ், நஷாத் ஆகியோர் கொண்டு வந்த கைப்பைகளை சோதனை செய்தனர். இதில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் இருந்தது. மொத்தம் 79 லட்சத்து 90 ஆயிரம் இருந்தது.
ஆவணங்கள் இல்லை
இந்த பணம் கொண்டு செல்ல போதிய ஆணவம் இல்லை. பெங்களூரில் நகைக்கடைகளில் தங்கம் கொடுத்ததற்கு உரிய பணத்தை கொல்லத்திற்கு வாங்கி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதை நம்பாத அதிகாரிகள் இந்த பணத்தை தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி சபாபதியிடம் வழங்கினர். இவர் இந்த சம்பவம் குறித்து விசாரித்து இந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
ஹவாலா பணமா?
இந்த பணத்தை எடுத்து வந்த 2 வாலிபர்களிடம் உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்து விசாரணை மேற்கொண்டனர்.