முதல்வர் பதவியில் நிலைக்க...இடைவிடா யாகம் வளர்க்கும் எடப்பாடி பழனிச்சாமி!
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள இடைவிடாது யாகம் வளர்க்க போகிறாராம்.
சென்னை: தமிழக முதல்வர் பதவியில் நீடிக்க எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நீண்ட கால யாக பூஜைகள் நடத்த முடிவு செய்துள்ளார். நாளையும் நாளை மறுநாளும் இந்த யாகம் நடத்தப்படுகிறதாம்.
அதிமுக இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்துகிடக்கிறது. ஜெயலலிதாவின் 'உண்மை விசுவாசிகள்' ஒரு அணியாக இணைந்து அதிமுகவை மீண்டும் உயிர்ப்பிக்க நினைக்கிறார்கள்.
இதுதான் அக்கட்சியின் கடைநிலைத் தொண்டர்கள் விருப்பமும். ஆனால் மேல்மட்டத் தலைவர்கள் எல்லோரும் அதிகாரப் பகிர்வில் 'பிசியாக' இருக்கிறார்கள்.
இதனால் தினமும் பேச்சுவார்த்தை, பேட்டிகள், பதவி பேரங்கள் என்று பரபரக்கிறது அதிமுக வட்டாரம். அப்படியே இரு அணிகள் இணைந்தாலும் முதல்வர் பதவியை விட்டு தரமுடியாது என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.
ஆனாலும் அவரது பதவிக்கு சிக்கல் ஏதும் வரக்கூடாது என்பதில் அவரது குடும்பத்தினரும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் 28, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் மாபெரும் யாகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதே போல கடந்த வாரமும் ரகசிய யாகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.