ஒரு அனுதாப செய்தியை சொல்லக்கூட மோடிக்கு நேரமில்லையே.. ஈவிகேஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடியால் ஒரு அனுதாப செய்தியை கூட சொல்ல முடியவில்லை என்பது வேதனைக்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த வாரம் முதல் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட சேதம் அதிகம். இதுவரை மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஒரு அனுதாப செய்தி கூட சொல்லவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இளங்கோவன், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஒரு அனுதாப செய்தியைக் கூட மோடியால் கொடுக்க முடியவில்லை. இவ்வளவு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதும், மத்திய அரசு அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்யவில்லை. மத்திய அரசும் ஒரு இரங்கல் செய்தியைக் கூட வெளியிடவில்லை. மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிற இந்த சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் பொறுப்பற்றத் தன்மையில் இருப்பது வேதனைக்குரியது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.