கூடிய சீக்கிரமே "மாதாஜி, பிதாஜி"ன்னு கூப்பிடப் போறாங்க பாருங்க... இளங்கோவன்!
ஆம்பூர்: மத்திய அரசு இந்தியைத் திணிக்க ஆரம்பித்துள்ளது. ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் தினம் என்று மாற்றி விட்டனர். இனி வரும் காலத்தில் தமிழகத்தில் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை பிதாஜி, மாதாஜி என்று அழைக்கும் நிலை ஏற்படலாம் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு வந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, மத்திய அரசின் இந்தித் திணிப்பு குறித்துக் குறிப்பிட்டார்.
பேட்டியின்போது இளங்கோவன் கூறியதாவது....
மத்தியில் மீண்டும் மறு தேர்தல் வரும்
பிரதமர் மோடி மீது பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால் மத்தியில் மறு தேர்தல் நடக்கும். 2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.
தலைவர்களை ஓரம் கட்டும் மோடி
பாஜகவில் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வரப்படுகின்றனர். பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட தன்னுடைய ஆதரவாளரை மோடி பாஜக தலைவராக்கியுள்ளார். மோடி தன்னுடைய தனிப்பட்ட ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். அதனால் மூத்த தலைவர்களிடையே அவர் மீது அதிருப்தி நிலவுகிறது.
நிலைமையைப் பார்த்தால்
மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகளும், கொண்டு வரப்படும் சட்டங்களையும் பார்த்தால் விரைவில் மறு தேர்தல் வரும். அப்பொழுது காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். மோடி இந்துத்துவ கொள்கைகளை முழுமையாக திணிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறார்.
இந்தித் திணிப்பு
மத்திய அரசு அதிகாரிகளும், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எழுதும் கடிதங்களும் இந்தியில் எழுதப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று அழைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை அம்மா, அப்பா என்று கூறாமல் மாதாஜி, பிதாஜி என்று கூறும் நிலை உருவாகலாம்.
குற்றப் பின்னணி அமைச்சர்கள்
குற்றப்பின்னனி உள்ள அமைச்சர்கள் குறித்து பிரதமர் மோடி ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெயலலிதாவை சட்ட அமைச்சர் சந்தித்தது ஏன்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கர்நாடகத்தில் வழக்கு நடந்து தற்போது இந்த மாதம் தீர்ப்பு வெளிவரக்கூடிய நிலை உள்ளது. அவ்வாறான நிலையில் குற்ற பின்னனி உடைய ஜெயலலிதாவை மத்திய சட்ட அமைச்சர் தனியாக சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசியது நியாயமானதாக தெரியவில்லை. அதனால் தீர்ப்பு ஒருதலைபட்சமாக வர வாய்ப்பு உள்ளதே.
கவிதை பாடி கிண்டலடிக்கும் அமைச்சர்
அதிமுக அமைச்சர் ஒருவர் கவிதை பாடுகிறேன் என்று கூறிக் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் இழிவுபடுத்தி வருகிறார்.
நாங்களும் ஜெ. குறித்து விமர்சிப்போம்
தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசினால் நாங்களும் தமிழக முதல்வரை தனிப்பட்ட முறையில் இழிவாக பேச வேண்டிய நிலை ஏற்படும்.
அதை ஞானதேசிகன் அறிவிப்பார்
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் அறிவிப்பார் என்று கூறினார் இளங்கோவன்.