துக்ளக் விழாவில் மோடி, ஜெயலலிதாவை புகழ்ந்த சோ.. சொல்லிக்காமல் வெளிநடப்பு செய்த இளங்கோவன்
சென்னை: துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் சோ.ராமசாமி பேசியபோது, தனது அதிருப்தியை வெளிப்படுத்தும்விதமாக மேடையில் இருந்து எழுந்து சென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
பல அரசியல் மாற்றங்களை விவாதிக்கும் மேடையாக துக்ளக் ஆண்டுவிழா மாறிப்போயுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ளதால், இவ்வாண்டு, துக்ளக் ஆண்டு விழாவில் சோ ஆற்றும் உரைக்கு எதிர்பார்ப்பு எகிறிப்போயிருந்தது.
சென்னை மியூசிக் அகாடமியில் சில தினங்கள் முன்பு ஆண்டுவிழா நடைபெற்றது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால், வீட்டில் வசித்தாலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளவர் சோ. எனவே, வீல் சேரில், மருத்துவ உபகரணங்கள் உதவியோடு அவர் மேடைக்கு வந்தார்.

பல கட்சியினர்
சோவின் அழைப்பை ஏற்று பல கட்சி தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் வேற்றுமையை மறந்து பங்கேற்றனர். பல தலைவர்களுடனும் சோவிற்கு நெருங்கிய நட்பு இருப்பது இதற்கு காரணம்.

பாஜக, அதிமுக, காங்கிரஸ்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் பழ.கருப்பையா, பாமக சார்பில் அன்புமணி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார், த.மா.கா கட்சி சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அரசியல் பேச்சு
`இன்றைய அரசியல்' என்ற தலைப்பில் அரசியல் தலைவர்கள் பேசினர். அதிமுக அரசு மீது குறைகள் இருந்தாலும் நிறைகள் இருக்கின்றன. தொழில்வளம் பெருக வழிசெய்துள்ளனர். மத்திய அரசிடம் போராடித் திட்டங்களைப் பெற்றுள்ளனர் என்று சோ பேசினார்.

குடும்ப ஆட்சி
சோ மேலும் பேசும்போது, அதிமுக ஆட்சி வந்ததால்தான் ஒரு குடும்ப ஆட்சி போனது. குடும்ப ஆட்சி திரும்பி வந்துவிட நமது ஓட்டு பயன்படக் கூடாது. நிச்சயமாகத் தோற்க போகும் கட்சிக்கு ஓட்டு போடக் கூடாது. மத்தியில் மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி போல இந்த அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று பேசினார்.

இளங்கோவன் வெளிநடப்பு
மோடியைப் புகழ்ந்து சோ பேசிக்கொண்டிருந்தபோது, அதிருப்தி அடைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனே மேடையை விட்டுச் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பினார். இதுகுறித்து வார இதழ் ஒன்றிடம் இளங்கோவன் கூறியுள்ளதாவது: அனைத்துக் கட்சித் தலைவர்களும் எத்தகைய அரசியல் காழ்ப்பு உணர்ச்சியும் இல்லாமல் மேடை நாகரிகத்தோடு பேசினர்.

சோ பேசியது சரியில்லை
இளைஞர்கள் நன்றாகப் படித்து நாட்டை வளப்படுத்த வேண்டும். அவரவர் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும். பணத்தாசையோடு யாரும் அரசியலுக்கு வரக் கூடாது, என்று, நான் பேசினேன். ஆனால், நிறைவுரை ஆற்றிய சோ, மோடி அரசையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்தார். அவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் பேசியதற்கு பதில் சொல்லவும் வாய்ப்பு இல்லை என்பதால் விழாவில் இருந்து வெளியேறினேன். அனுபவமிக்க மூத்தவரான சோ, இப்படி பேசியது சரியல்ல என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

அன்புமணி வரவேற்பு
அதேநேரம், அன்புமணி ராமதாஸ், சோ பேச்சை முற்றாக நிராகரிக்கவில்லை. அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. ஊழல் இருக்கிறது என்று சோ பேசினார். இதுதான் மக்களின் பெரிய பிரச்னைகள். திமுக பற்றி சோ பேசுகையில், ஊழல், குடும்ப ஆட்சி வந்துவிடக்கூடாது என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இரண்டு பேருமே வேண்டாம் என்றுதான் நான் பேசினேன். புதிய தலைமைதான் தமிழகத்துக்கு இப்போதைய தேவை என்றார்.

த.மா.க நழுவல்
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரவர் கருத்துகளை வெளியிட்டார்கள். ஆசிரியர் என்ற முறையிலும் விழாத் தலைவர் என்ற முறையிலும் சோ தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி இருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications