மூதாட்டிகள் முற்றுகையில் திணறிப் போன ஈரோடு கலெக்டர் ஆபீஸ்!
சென்னை: உதவித் தொகைகளை வழங்கக் கோரி மூதாட்டிகள், மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகங்கள் திணறிப் போய் விட்டன.
மாநிலம் தழுவிய இந்தப் போராட்டத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் ஆகியவை இணைந்து இன்று நடத்தின.
எந்தவித விசாரணையோ, முன்னறிவிப்போ இல்லாமல் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் இந்தப் போராட்டத்தில் இவரக்ள் ஈடுபட வேண்டியதாயிற்று.
ஈரோட்டில் 17 லட்சம் பேர்களுக்கு மீண்டும் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, விதவைகளுக்கு 45 வயது, முதியோர்களுக்கு 65 வயது என நிர்ணயம் செய்திருப்பதோடு அவர்கள் அனாதையாக இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை திரும்பப்பெற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வறுமைக்கோட்டு பட்டியல் தயார் செய்து ஏற்கனவே விண்ணப்பித்திருப்பவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட முதியவர்கள் கூட்டத்தால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகம் திணறிப் போய் பரபரப்பாக காணப்பட்டது.