தப்பியது தேமுதிக, மதிமுக... தேர்தல் ஆணைய புதிய அறிவிப்பால் 'மாநில கட்சி' அந்தஸ்து தொடரும்
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு மாநில மற்றும் தேசிய கட்சி என்ற அங்கீகாரங்கள் அளிப்பது தொடர்பான பரிசீலனைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. இனி ஒரு தேர்தலில் குறிப்பிட்ட கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்து வாக்கு சதவீதத்தை இழந்தாலும் உடனடியாக அதன் அங்கீகாரம் ரத்தாகாது. தொடர்ந்து 2 தேர்தல்களில் படுதோல்வியடைந்தால் மட்டுமே அந்தக் கட்சியின் தேசிய மற்றும் மாநில கட்சி அங்கீகாரங்கள் பறிபோகும்.
பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்தியக் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகள் அங்கீகாரம் பெற்றவை. 64 மாநிலக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ், ஓர் இடத்தை மட்டும் கைப்பற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தேசிய அங்கீகாரம் கேள்விக் குறியாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அந்தக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
இதைப்போலவே தமிழகத்தில் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மாநில கட்சி அங்கீகாரமும் பறிபோகும் நிலையில் உள்ளது. இந்த நிலையில்தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்வது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதனால் தேமுதிக, மதிமுக ஆகியவை ஆறுதலடைந்துள்ளன.
தொடர்ந்து 2 லோக்சபா தேர்தல்களிலோ அல்லது அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களிலோ மிக மோசமான தோல்வியைத் தழுவினால் மட்டுமே கட்சிகளின் அங்கீகாரம் இனி பறிக்கப்படும்; அதே நேரத்தில் பிற விதிகளில் எதுவும் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.