சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயங்கும்!
சென்னையில், மின்சார ரயில்கள் வார நாட்களில் இயங்குவது போல நாளையும் இயங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மின்சார ரயில்கள் வார நாட்களில் இயங்குவது போல நாளையும் இயங்கும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களிலும், அதனை சுற்றியுள்ள புறநகரைச் சேர்ந்த மக்களும் இந்த போராட்டத்தால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் தப்பிக்க மின்சார ரயில் தான் ஒரே தீர்வாக இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாளையும் வாரநாட்களில் ரயில்கள் இயங்குவது போல இயக்கப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
பொதுவாக ஞாயிற்றுகிழமைகளுக்கு என தனியாக ஒரு அட்டவணையை ரயில்வேத்துறை பின்பற்றும், வார நாட்களில் உள்ளது போல ஞாயிற்றுகிழமைகளில் அதிகளவு ரயில் போக்குவரத்து இருக்காது. ஆனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் அவதிக்குள்ளாகி வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணத்திற்கு 151 சேவைகளும் செங்கல்பட்டுக்கு 74 சேவைகளும், கடற்கரை- தாம்பரம் இடையே 224 சேவைகளும் நாளை வழக்கம்போல் இயக்கப்படுகிறது. பறக்கும் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமையில் 96 சேவைகளாக இருக்கும். ஆனால் நாளைய தினம் மற்ற நாட்களைபோல் 132 சேவை இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications