மது ஒழிந்தால்தான் நாடு நல்லாருக்கும்.. என்கவுண்டர் வெள்ளத்துரை பரபரப்புப் பேச்சு!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தின் பூஜை விழாவில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை கலந்து கொண்டது பலரையும் விழி விரிய வைத்துள்ளது. அந்த விழாவில் அவர், ஜாதியும், மதுவும் ஒழிந்தால்தான் நாடும், மக்களும் நலமுடன் இருக்க முடியும் என்று பேசினார்.
அந்தப் படத்தின் பெயர் தொப்புள் கொடி. பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஹபீப் ரகுமான் என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார். சுப்பிரமணிய பாரதி என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளப்பச்சேரி என்ற கிராமத்தில் நடந்தது. இதில்தான் வெள்ளத்துரை கலந்து கொண்டார்.
ஏன் இந்தப் படம்
இந்தப் படம் என்ன கதை என்பது குறித்து ஹபீப் ரகுமான் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டமென்றாலே எந்த வேலை வெட்டியுமில்லாமல், எல்லோரும் சாதி வெறிபிடித்து அலைபவர்கள்போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள். யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த மக்களும் பழியை சுமக்க வேண்டியுள்ளது. இதை மாற்றவும், இனி இந்த மாவட்டத்தில் எந்தக் காரணத்துக்காகவும் சாதிப் பிரச்னையும், அதனால் இழப்புகளும் வரக்கூடாது என்பதற்குத் தீர்வு சொல்லவும் தொப்புள் கொடி என்ற இந்தப் படத்தை எடுக்கிறோம். இதில் ஹீரோ, ஹீரோயின் மட்டும்தான் புரபஷனல் நடிகர்கள். மற்ற பாத்திரங்களில் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே நடிக்க உள்ளார்கள். படத்தை இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
சுப்பிரமணிய பாரதி
இயக்குநர் சுப்பிரமணிய பாரதி கூறுகையில், நான் பத்து வருடங்களாக உதவி இயக்குநராக இருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் நந்தி பட ஷூட்டிங் நடந்தது. அதில் நான் பணியாற்றும்போது இங்கிருக்கும் மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்து. அதில் நடித்த உள்ளூர் நடிகர்களான ராஜேந்திரன், கலையரசன் ஆகியோரின் நட்பு கிடைத்தது. ராஜேந்திரன்தான் அப்போது இந்தப் படத்துக்கான மூலக்கதையை சொன்னார். ஷூட்டிங் எடுப்பதற்கு காவல் துறை அனுமதி கொடுப்பார்களா என்று கூடுதல் எஸ்.பி வெள்ளதுரையிடம் கதையைச் சொன்னபோது உற்சாகமாகிவிட்டார். இதுவரை எந்த சினிமா விழாவுக்கும் போகாத அவர் தொடக்கவிழாவுக்கு வந்துவிட்டார் என்றார்.
வெள்ளத்துரையாக சத்யராஜ்
இந்தப் படத்தில் வெள்ளத்துரை கேரக்டரும் வருகிறதாம். அதில் நடிகர் சத்யராஜை நடிக்க வைப்பது குறித்துப் பேசி வருகிறார்களாம். சத்யராஜ் ஏற்கனவே வால்டர் வெற்றிவேல் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து அசத்தியவர் என்பது நினைவிருக்கலாம்.
தாலியைக் கொடுத்த பெண்
இந்தப் படத்தின் பூஜையின்போது இனிமேலும் சாதிக் கலவரத்தால் எந்தப் பெண்ணின் தாலியும் கழுத்திலிருந்து இறங்கக் கூடாது. அதற்கு இந்தப் படத்திற்கான என் பங்களிப்பாக எனது தாலியைத் தருகிறேன் என்று கூறிக் கொடுத்தாராம் சகுந்தரா என்ற பெண். இவர் சாதிக் கலவரத்தில் தனது கணவரை இழந்தவர் ஆவார்.
வெள்ளத்துரையின் கருத்து
இந்த பூஜையின்போது பேசிய காவல் அதிகாரி வெள்ளத்துரை, சாதியும் மதுவும்தான் மனிதனை மிருகமாக்குகின்றன. இவை இரண்டும் ஒழிந்தால் நாடு நன்றாக இருக்கும். சாதிப் பிரச்னைகளுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறி வாழ்த்தினாராம்.